ராமேசுவரம்-இலங்கை இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவை
ரூ.118 கோடியில் கப்பல் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.;
கன்னியாகுமரி,
ராமேசுவரம் மீன்பிடி துறைமுக அலுவலகம் அருகே துறைமுக கடல்சார் வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த பழைய துறைமுக அலுவலகம் இடிக்கப்பட்டு ரூ.4 கோடியே 19 லட்சத்தில் புதிய அலுவலகம் கட்டப்பட்டது.
இதற்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த புதிய துறைமுக அலுவலகம் திறக்கப்பட்டதன் நோக்கமே ராமேசுவரம்- இலங்கையின் தலைமன்னார் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்குத்தான். ரூ.118 கோடியில் கப்பல் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதிக்கு பின்னர் சாகர்மாலா திட்டத்தின் கீழ் ராமேசுவரம்- தலைமன்னார் இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.