நெல்லையில் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லையில் பெயிண்டர் ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.;
நெல்லையை அடுத்த பேட்டை அசோகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லையா மகன் ஆறுமுகம் (வயது 44). பெயிண்டர். இவரது மனைவி இசைவாணி (34). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இசைவாணி தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். ஆறுமுகத்துக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இவர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இசைவாணி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு பத்தமடையில் உள்ள தனது அண்ணன் செந்தில்குமார் வீட்டிற்கு சென்று விட்டார்.
சம்பவத்தன்று பத்தமடைக்கு சென்று மனைவியை சந்தித்த ஆறுமுகம், அவரை வீட்டுக்கு வருமாறு அழைத்தபோது, குடிப்பழக்கத்தை விட்டால்தான் வீட்டிற்கு வருவேன் என்று கூறிவிட்டார். இதனால் மனமுடைந்த ஆறுமுகம் தனது வீட்டுக்கு சென்று உத்தரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்ததும் பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆறுமுகம் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.