சென்னை விமான நிலையத்தில் 20-ந்தேதி வரை கூடுதல் பாதுகாப்பு
வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு தீவிர சோதனைகள் நடந்து வருகின்றன.;
சென்னை,
சுதந்திர தின விழா வரும் 15-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை விமான நிலையத்தில் நேற்று அதிகாலை முதல் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டு உள்ளது. வரும் 20-ந் தேதி நள்ளிரவு வரை இது அமலில் இருக்கும்.
இதனால் விமான நிலையத்தின் வெளிவட்ட பகுதியில் சென்னை மாநகர போலீசாரும், உள்வட்ட பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு தீவிர சோதனைகள் நடந்து வருகின்றன. விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களை, பிரதான நுழைவு கேட் பகுதியிலேயே நிறுத்தி, சந்தேகப்படும் வாகனங்களை பாதுகாப்பு படையினா் மோப்ப நாய்கள் உதவியுடனும், வெடிகுண்டு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா்கள் மூலமும் பரிசோதிக்கின்றனா்.
விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர் ரோந்துவந்து கண்காணிக்கின்றனா். விமான பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன் விமானத்தில் ஏறும் இடத்தில் கூடுதலாக ஒரு பரிசோதனை நடத்தப்படுகிறது. எனவே உள்நாட்டு பயணிகள் விமானம் புறப்படும் நேரத்துக்கு 1½ மணிநேரம் முன்னதாகவும். சா்வதேச பயணிகள் 3½ மணிநேரத்துக்கு முன்னதாகவும் வர பயணிகளை அறிவுறுத்தியுள்ளனா்.