"கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு குழந்தையை கொன்றேன்" - கைதான பெண் அதிர்ச்சி வாக்குமூலம்

கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த இடையூறாக இருந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதாக வாக்குமூலம் அளித்தார்.;

Update:2025-07-27 07:01 IST


கோவை மாவட்டம் இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசி (30) என்ற இளம்பெண். இவருடைய கணவர் ரகுபதி. இவர்களுக்கு நான்கரை வயதில் அபர்ணாஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்தது. ரகுபதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவியை பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து தமிழரசி, தனது குழந்தை அபர்ணாஸ்ரீயுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது அவர் தன்னை அழகாக வீடியோ எடுத்து அதனை முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். மேலும் கட்டிட வேலைக்கும் சென்று வந்தார்.

இந்த சூழலில் அவருடன் கட்டிட வேலை செய்து வரும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வசந்த் என்பவர் உடன் சில மாதங்களாக பழகி வந்து உள்ளார். அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது நான்கரை வயது பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்தது.

இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு இருந்த தமிழரசியை பிடித்து வந்து கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள கோவை மாநகர கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது குழந்தை அழுது கொண்டு இருந்ததாகவும், அப்போது அவர் அடித்ததால் குழந்தை இறந்து விட்டதாகவும் தமிழரசி தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து காவல் துறையினர் தமிழரசி இடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அவர் வசித்து வரும் இருகூர் பகுதிக்கு நேரில் சென்று சம்பவம் தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டனர். இந்த கொடூரமான சம்பவத்தில் குழந்தையின் தாயான தமிழரசியிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணை கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விட்டு பிரிந்து தனியாக மகளுடன் வாழ்ந்து வந்ததாகவும், கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்த தமிழரசி, அதே இடத்தில் பணி புரிந்த வசந்த் என்பவருடன் கடந்த சில மாதங்களாக தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த இடையூறாக இருந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்தார். இந்நிலையில் போலீசார் தமிழரசியை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், "எனது கணவர் பிரிந்து சென்ற பின்னர் வசந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. வசந்தை திருமணம் செய்து, குடும்பம் நடத்த முடிவு செய்தேன். இதுகுறித்து அவரிடம் கூறியபோது, குழந்தை இருந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும், தனியாக வந்தால் ஏற்றுக்கொள்வேன் என்றும் கூறினார். இதனால் வேறு வழியின்றி குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்தேன்" என்று தமிழரசி கூறினார்.

இதற்கிடையில் கொலை செய்ய தூண்டியதாக கள்ளக்காதலன் வசந்தை நேற்று மாலை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்காதலுக்காக நான்கரை வயது பெண் குழந்தையை பெற்ற தாயே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்