சாதனை படைத்த முன்னாள் மாணவர்களை அரசு பள்ளியின் தூதர்களாக நியமிக்க கல்வித்துறை திட்டம்
சாதனை படைத்த முன்னாள் மாணவர்களை பள்ளியின் தூதர்களாக நியமிக்க வழிகாட்டு நெறிமுறைகளை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.;
கோப்புப்படம்
பள்ளிகளின் தரமும், செயல்பாடுகளும் அப்பள்ளியில் படித்த மாணவர்களின் தற்போதைய நிலையை கொண்டே முடிவு செய்யப்படுகிறது. ஆகவே சமூகத்தில் உயரிய நிலையில் உள்ள முன்னாள் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் படித்த பள்ளியின் தூதர்களாக நியமிக்கப்படுவர் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ இணையதளம் வாயிலாக 8 லட்சத்து 50 ஆயிரம் முன்னாள் மாணவர்கள் இணைந்துள்ளனர். முன்னாள் மாணவர்களை தூதுவர்களாக நியமிக்கும்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியும் என பள்ளிக் கல்வித்துறை நம்புகிறது. அப்படி தூதர்களாக முன்னாள் மாணவர்களை நியமிக்க சில வழிகாட்டு நெறிமுறைகளை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தூதராக நியமிக்கப்படும் முன்னாள் மாணவர்கள் அவருடைய பள்ளியின் செயல்பாடுகள், தேவைகள், கருத்துகளை அனைவருக்கும் பகிரும் முக்கிய பிரதிநிதியாக செயல்படுவார்கள். பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் பிற தேவைக்காக பெருநிறுவன சமூக பொறுப்பு நன்கொடைகள், முன்னாள் மாணவர்கள் நன்கொடைகள் போன்றவற்றை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள். கல்வி சார்ந்த செயல்பாடுகளில் உறுதுணையாகவும் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூற்றாண்டு பள்ளிகள் உள்பட 8,048 பள்ளிகளில் முதற்கட்டமாக சாதனை புரிந்த முன்னாள் மாணவர்களை தூதர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும். பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் பெற்றோர், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் இணைந்து தேர்வு செய்ய வேண்டும். எந்தவித சமூக, பொருளாதார, கலாசார, அரசியல் வேறுபாடின்றி நடப்பவராக இருப்பவரை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.