தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே அறியாத எடப்பாடி பழனிசாமி - தா.மோ.அன்பரசன்
தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொழில் வளர்ச்சி திட்டமும் கடைகோடி மக்களுக்கு சென்றடையும் வண்ணம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என அன்பரசன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோவில் பட்டியில் 1.08.2025 அன்று தீப்பொட்டி உற்பத்தியாளர்கள், கடலை மிட்டாய் உற்பத்தியாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் லைட்டரை தடை செய்ய அ.தி.மு.க. முயற்சி எடுக்கும் எனவும், கடலை மிட்டாய் உற்பத்திக்கு தேவையான உதவிகளை செய்யும் எனவும், தெரிவித்துள்ளார்.
10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தீர்க்கப்படாத இந்த பிரச்சினை குறித்து, கழக அரசு பொறுப்பேற்றப் பின் தமிழக முதல்-அமைச்சர் தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை விதிக்குமாறு 08.09.2022 அன்று, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார், தமிழக அரசின் தொடர் அழுத்தத்தின் காரணமாக மத்திய அரசு 29.06.2023 அன்று ரூ.20-க்கும் குறைவான (Pocket Lighters Gas Fuel & Non-refillable) ஆகியவற்றிற்கு இறக்குமதி செய்ய தடை விதித்தது. இருப்பினும், மற்ற நாடுகளில் இருந்து லைட்டர்கள், உதிரிபாகங்களாக, இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்டு, லைட்டர்கலாக பொருத்தப்பட்டு மீண்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதனால் தீப்பெட்டி தொழிலின் உள்நாட்டு வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மீண்டும் மத்திய அமைச்சர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் 13.10.2024- அன்று பாக்கெட் லைட்டர்களின் பாகங்கள், (gas fuelled, non-refillable or refillable lighters) சிகரெட் லைட்டர்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடு விதித்து அறிவித்துள்ளது.
ரஷியா, உக்ரைன் போர், அமெரிக்கா பொருளாதார கட்டுபாடு காரணமாக பொட்டாசியம் குளோரைடு இறக்குமதி தடை செய்யப்பட்டது, தீப்பெட்டி தொழில் பாதிப்பு அடைந்த போது தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு சென்னை பெட்ரோ கெமிக்கல் மூலம் மொத்தமாக கொள்முதல் செய்து தீப்பெட்டி தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த பிரச்சினைகள் குறித்து சட்டமன்ற கேள்வி நேரத்தின் போதும், முன்னாள் அமைச்சர் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதும் பலமுறை பதில் அளித்துள்ளேன். 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியின் அலங்கோலத்தால் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்வதையே வாடிக்கையாக கொண்ட எதிர்கட்சி தலைவருக்கு கழக அரசின் நடவடிக்கை எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
உலகம் அறிந்த கோவில்பட்டி கடலை மிட்டாய், உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி கோவில்பட்டி பகுதியில் கடலை மிட்டாய் குறுங்குழுமம் அமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி ரூ.6.42 கோடி அரசு மானியத்துடன், ரு.7.13 கோடி மதிப்பீட்டில், கடலை மிட்டாய் உற்பத்திக்கான பொது வசதி மையம் அமைக்க, சமூக நல மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாத்திற்குள் இத்திட்டம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக உள்ள தமிழ்நாட்டில் ஒவ்வொரு திட்டமும் கடைகோடி மக்களுக்கு சென்றடையும் வண்ணம் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. MSME துறைக்கு கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் ரூ. 3 ஆயிரத்து 617 கோடியே 62 லட்சம் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் கழக அரசு பொறுப்பேற்றபின் முதல்-அமைச்சர், இந்த 5 ஆண்டுகளில் மட்டும், ரூ. 6 ஆயிரத்து 626 கோடி நிதி ஒதுக்கி 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியை விட 2 மடங்கு நிதி வழங்கி MSME துறையை தூக்கி நிறுத்திய பெருமை நம் முதல்-அமைச்சருக்கு உண்டு. ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டு காலத்தில் 5 சுய வேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ். 2 ஆயிரத்து 57 கோடியே 90 லட்சம் மானியம் வழங்கப்பட்டு. 5 ஆயிரத்து 301 கோடியே 63 லட்சம் வங்கி கடனுதவி வழங்கி 63 ஆயிரத்து 14 புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.