நெல்லை ஆணவக்கொலை வழக்கு; காவல்துறை வழங்கிய ஆவணங்களை சரிபார்க்கும் பணி தீவிரம்
கவின்குமார் கொலை வழக்கு தொடர்பாக சுர்ஜித் மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர்.;
நெல்லை,
நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி. இந்த தம்பதிக்கு சுர்ஜித் (வயது 24) என்ற மகனும், சுபாஷினி என்ற மகளும் உள்ளனர். சரவணனும், கிருஷ்ணகுமாரியும் மணிமுத்தாறு பட்டாலியன் போலீசில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
இதற்கு முன் சரவணனின் குடும்பத்தினர் தூத்துக்குடியில் வசித்து வந்தபோது, அவரது மகள் படித்த பள்ளிக்கூடத்தில் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரசேகர் மகன் கவின்குமார் (வயது 26) படித்துள்ளார். அப்போது, கவின்குமாருக்கும், சுபாஷினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர். பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த கவின்குமார் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த 27-ந்தேதி கவின்குமாரின் தாத்தாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே, கவின்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் தாத்தாவை அழைத்துக்கொண்டு பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர். இதனை அறிந்து அங்கு சென்ற சுபாஷினியின் தம்பி சுர்ஜித், மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த கவினை தனியாக அழைத்துச் சென்று, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவின்குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிஓடினார். இதில் படுகாயம் அடைந்த கவின்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிரிழந்தார்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த ஆணவக்கொலை சம்பவம் தொடர்பாக சுர்ஜித் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரது தந்தை சரவணனையும் போலீசார் கைது செய்தனர். இதனிடையே, இந்த வழக்கின் விசாரணை கடந்த 30-ந்தேதி சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, கொலை வழக்கு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
மாநகர காவல்துறை அதிகாரிகளிடம் பெறப்பட்ட ஆவணங்களை சரிபார்க்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநகர காவல்துறையின் விசாரணை அதிகாரி சுரேஷ், சி.பி.சி.ஐ.டி. காவல் நிலையத்தில் ஆவணங்கள் தொடர்பாக விளக்கமளித்தார். மேலும், கொலை நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி. பதிவுகள் உள்ளிட்டவைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வழக்கின் விசாரணைக்காக 4 குழுக்கள் அமைக்கப்பட்டு கவின் கொலை செய்யப்பட்ட இடம் மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய இடங்களில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.