மகள் கண்முன்னே மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற டிரைவர்
சந்தோஷ் தனது மனைவி லட்சுமியின் முகம், வயிறு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார்.;
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் சண்ட் கபீர் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் டிரைவர் சந்தோஷ் யாதவ்(39). இவரது மனைவி லட்சுமி(35). இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ளார். இதற்கிடையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளனர்.
மேலும் சந்தோஷிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்காக லட்சுமி மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று காலை சுமார் 11 மணியளவில் விவாகரத்து வழக்கு தொடர்பான விசாரணைக்காக சந்தோஷ் மற்றும் லட்சுமி இருவரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். அவர்களோடு அவர்களின் மகளும் உடன் இருந்தார்.
அந்த சமயத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சந்தோஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து லட்சுமியின் முகம், வயிறு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார். மகள் கண்முன்னே இந்த சம்பவம் சில நொடிகளில் நடந்து முடிந்தது. இதில் படுகாயமடைந்த லட்சுமி, ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் லட்சுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், மனைவியை கொலை செய்த சந்தோஷை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.