சுற்றுலாத்துறை மூலம் ரூ.78.59 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் - அமைச்சர் ராஜேந்திரன் தகவல்
பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அமைச்சர் ராஜேந்திரன் அறிவுறுத்தினார்.;
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் இன்று 13.08.2025, சென்னை, வாலாஜா சாலையில் அமைந்துள்ள சுற்றுலா வளாகத்தில் மாவட்ட வாரியாக சுற்றுலா திட்டப் பணிகள் குறித்து சுற்றுலா அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திரன், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஒவ்வொரு ஆண்டும் மானியக் கோரிக்கையின்போது சுற்றுலாத்துறையின் மீது தனி கவனம் கொண்டு பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள் என்றும், அதனை செயல்படுத்தும் விதமாக சுற்றுலாத்துறையின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அந்த வகையில் முடியும் தருவாயில் உள்ள சுற்றுலா மேம்பாடு மற்றும் கட்டிட பணிகளான பூம்புகார் பாரம்பரிய நகரத்தினை ரூ.21.98 கோடி மதிப்பீட்டில் புதுப்பித்தல், கரூர் மாவட்டம் ரூ.2.29 கோடி மதிப்பீட்டில் பொன்னனியாறு நீர் தேக்கத்தினை சுற்றுலாத் தலமாக மேம்படுத்துதல், கன்னியாகுமரி மாவட்டம் ரூ.3.11 கோடி சித்தார் அணைகள் மற்றும் நீர் தேக்கத்தினை சுற்றுலாத் தலமாக மேம்படுத்துதல், நீலகிரி மாவட்டத்தில் ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் உதகை படகு இல்லத்தில் சாகச மற்றும் சுற்றுச்சூழல் முகாம் தலமாக உருவாக்குதல், செங்கல்பட்டு மாவட்டம் முதலியார் குப்பம் ரூ.1.16 கோடி மதிப்பீட்டில் சாகச மற்றும் சுற்றுச்சூழல் முகாம் தலமாக உருவாக்குதல்,
நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையில் ரூ.1.87 கோடி மதிப்பீட்டில் சாகச மற்றும் சுற்றுச்சூழல் முகாம் தலமாக உருவாக்குதல், கடலூர் மாவட்டம் பிச்சாவரம் பகுதியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்துதல், கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.3.98 கோடி மதிப்பீட்டில் திற்பரப்பு அருவியை சுற்றுலா தலமாக மேம்படுத்துதல், மாமல்லபுரத்தில் ரூ.8.00 கோடி செலவில் மரகத பூங்காவை பொது-தனியார் பங்களிப்பு முறையில் “ஒளிரும் தோட்டம்” அமைத்தல், ஏற்காட்டில் ரூ.9.82 கோடி மதிப்பீட்டில் அழகியல் நிலப்பரப்பு, காட்சி முனைகள், ஏரி முகப்பு, தெரு அலங்காரம் போன்ற சுற்றுலா வசதிகளை மேம்படுத்துதல், சஞ்சீவிராயன் கோவில் பகுதியில் ரூ.0.93 கோடி மதிப்பீட்டில் காட்சி முனை அமைத்தல், நாகமரை பகுதியில் ரூ.0.48 கோடி மதிப்பீட்டில் காட்சி முனை அமைத்தல், ஜவ்வாது மலை தேனீ பூங்கா பகுதியில் ரூ.0.42 கோடி மதிப்பீட்டில் காட்சிமுனை அமைத்தல்,
ஜவ்வாது மலையில் சுற்றுச்சூழல் பூங்கா பகுதியில் ரூ.0.45 கோடி மதிப்பீட்டில் காட்சிமுனை அமைத்தல், கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.3.26 கோடி மதிப்பீட்டில் மாத்தூர் தொட்டி பாலத்தில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்துதல், அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி அடைக்கல மாதா தேவாலயப் பகுதியை ரூ.1.29 கோடி மதிப்பீட்டிலும், சிவகங்கை மாவட்டம் பிரான் மலைப் பகுதியை ரூ.0.57 கோடி மதிப்பீட்டிலும், திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி பகுதியை ரூ.0.96 கோடி மதிப்பீட்டிலும், தெற்கு கள்ளிக்குளம் பகுதியில் ரூ.3.49 கோடி மதிப்பீட்டிலும் தேவாலயப் பகுதி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ரூ.1.68 கோடி மதிப்பீட்டிலும் கழுகு மலை பகுதி ஆகிய இடங்களை வழிபாட்டு சுற்றுலா தலங்களாக மேம்படுத்துதல் என மேற்கண்ட இடங்களில் நடைபெறும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அமைச்சர் ராஜேந்திரன் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் க.மணிவாசன், சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் கிறிஸ்துராஜ், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொது மேலாளர் கவிதா, கண்காணிப்பு பொறியாளர், திட்டப் பொறியாளர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் அனைத்து மாவட்ட சுற்றுலா அலுவலர்கள், ஆகியோர் கலந்துக்கொண்டனர்.