தூய்மை பணியாளர்களை சந்திக்க விடாமல் தமிழிசை சவுந்தரராஜன் தடுத்து நிறுத்தம்: நயினார் நாகேந்திரன் கண்டனம்
அரசியல் கட்சி தலைவர்களை தி.மு.க. அரசு ஒடுக்க நினைப்பது ஜனநாயக படுகொலை என நயினார் நாகேந்திரன் அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.;
சென்னை,
12 நாட்களாக போராடி வரும் தூய்மை பணியாளர்களை முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று மாலை சந்திக்க இருந்த நிலையில், அவர் வீட்டிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். இதனை கண்டித்து தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
அதில், தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி எண் 285-ன் படி பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சென்னையில் கடந்த 12 நாட்களாக போராடி வரும் தூய்மை பணியாளர்களை இன்று மாலை சந்திக்கவிருந்த தமிழக பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான சகோதரி @DrTamilisai4BJP தமிழிசை சவுந்தரராஜனை வீட்டிலேயே தடுத்து நிறுத்த முயன்ற @arivalayam அரசின் அடக்குமுறை வன்மையாக கண்டிக்கத்தக்கது. பொதுமக்களின் நலனுக்காக போராடும் அரசியல் கட்சி தலைவர்களை தி.மு.க. அரசு ஒடுக்க நினைப்பது ஜனநாயக படுகொலை!
தூய்மை பணியாளர்களின் துயரங்களுக்கு செவிமடுக்காத தி.மு.க. அரசுக்கு, அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவோர்களை தடுப்பதற்கு மட்டும் என்ன உரிமை இருக்கிறது? தமிழகத்தில் தங்களின் உரிமைகளை கேட்டு போராடுபவர்களையும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களையும் கைது செய்து, ஜனநாயக குரல்வளையை நெரிக்கும் விடியா அரசுக்கு கூடிய விரைவில் முடிவு கட்டப்படும்! என தெரிவித்து உள்ளார்.