சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர் கைது
சென்னை செங்குன்றத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர் கைது செய்யப்பட்டார்.;
சென்னை செங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் காமராஜ் என்ற டேவிட் (54 வயது). கிறிஸ்தவ மதபோதகரான இவர், அதே பகுதியில் கிறிஸ்தவ திருச்சபை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஜெயா (50 வயது). இவர், அதே பகுதியில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
ஜெயா, மாலை நேரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிகளுக்கு திருச்சபையில் வைத்து டியூஷன் சொல்லி கொடுத்து வருகிறார். இவரிடம் 10 வயது முதல் 13 வயது வரை உள்ள மாணவிகள் 10-க்கும் மேற்பட்டோர் டியூஷன் படித்து வருகின்றனர். மனைவியிடம் டியூஷன் படிக்க வரும் பள்ளி மாணவிகளுக்கு டேவிட் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அவரது பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்ததால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகள் இதுபற்றி தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர்.
அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், செங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதபோதகரான டேவிட்டை கைது செய்தனர்.