குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு.. விடைக்குறிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி
விடைக்குறிப்பில் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் உரிய ஆவணங்களுடன் வரும் 28-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.;
சென்னை,
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 3,935 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு, கடந்த 12-ம் தேதி நடந்தது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இத்தேர்வை 13.48 லட்சம் பேர் எழுதினர்.
இந்நிலையில், தேர்வுக்கான உத்தேச விடைகள் அடங்கிய விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி-யின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) தேர்வர்கள் விண்ணப்ப பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை கொடுத்து பார்த்துக்கொள்ளலாம். உத்தேச விடைக்குறிப்பில் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் உரிய ஆவணங்களுடன் வரும் 28-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
மேலும், அதிகாரபூர்வ இணைய வழியில் மட்டுமே தெரிவிக்க வேண்டும். அஞ்சல், மின்னஞ்சல் வழியாக பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது. தேர்வின் போது தேர்வர்களுக்கு எந்த குறியீட்டைக் கொண்ட வினாத்தாள் வழங்கப்பட்டிருந்தாலும், தற்போது தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள் தொகுப்பில் உள்ள கேள்விகளின் வரிசை எண் படியே தேர்வர்கள் தங்களது மறுப்பினைத் தெரிவிக்க வேண்டும் எனவும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.