நெல்லையில் கொல்லப்பட்ட ஐ.டி. ஊழியரின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த இளைஞர் கவின்குமார்;

Update:2025-08-03 10:05 IST

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த இளைஞர் கவின்குமார். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இதனிடையே, கவின்குமார் கடந்த 27ம் தேதி நெல்லை பாளையங்கோட்டையில் படுகொலை செய்யப்பட்டார். காதல் விவகாரத்தில் காதலியின் சகோதரன் சுர்ஜித் என்பவர் கவின்குமாரை வெட்டிக்கொன்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சுர்ஜித் போலீசில் சரணடைந்தார். கவின்குமார் காதலித்த இளம்பெண்ணின் பெற்றோரான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி சரவணன், கிருஷ்ணகுமாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதில், இளம்பெண்ணின் தந்தை சரவணனையும் போலீசார் கைது செய்தனர்.

கவின்குமார் கொலை வழக்கு கடந்த 30ம் தேதி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அதேவேளை, காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட கவின்குமாரின் உடல் நேற்று முன் தினம் தகனம் செய்யப்பட்டது. கவின்குமாரின் சொந்த ஊரான ஆறுமுகமங்கலத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

இதனிடையே, கவின்குமாரின் தந்தை சந்திரகுமாரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். மேலும், அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் போலீசில் மனு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், கவின்குமாரின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சந்திரகுமாருக்கு 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்