எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.;
தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. அதோடு மட்டுமின்றி மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பாம்பன் பகுதியை சேர்ந்த 9 மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் வழக்கம்போல் இன்று அதிகாலை மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.
மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 9 பேரை கைது செய்தனர். அதோடு மீனவர்களின் விசைப்படகினையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும் புத்தளம் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். முன்னதாக, ராமேசுவரத்தை சேர்ந்த 5 மீனவர்களை நேற்று நள்ளிரவு இலங்கை கடற்படையினர் ஏற்கனவே கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.