தூத்துக்குடியில் 6வது புத்தகத் திருவிழா 22ம்தேதி தொடக்கம்: பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு
புத்தகத் திருவிழாவில் பள்ளிச்சீருடையுடன் பங்குபெறும் பள்ளி மாணவ, மாணவிகள் புத்தகத் திருவிழாவில் வாங்கும் புத்தகங்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படும்.;
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்ட புத்தகத் திருவிழா செயலாக்க குழு மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துடன் இணைந்து தூத்துக்குடி மாவட்டத்தில், 6வது புத்தகத் திருவிழா 2025 தூத்துக்குடி தருவை மைதானத்தில் வைத்து 22.8.2025 முதல் 31.8.2025 வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளது.
இந்த புத்தகத் திருவிழாவிற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி, வினாடி வினாடி, திருக்குறள் போட்டிகள் (ஒப்புவித்தல் மற்றும் வினாடி வினா) மாறுவேடப் போட்டி மற்றும் சிறுகதை எழுதுதல் போட்டிகள் நடைபெற உள்ளது. மேற்சொன்ன போட்டிகள் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் நடத்தப்பட உள்ளது. அனைத்து போட்டிகளுக்கும் தனித்தனி தலைப்புகள் வழங்கப்படும்.
மேலும் போட்டிகளானது வகுப்புகள் வாரியாக (5ம் வகுப்பு, 6 முதல் 8வது வகுப்பு வரை, 9-10 வகுப்புகள், 11-12 வகுப்புகள்) நடைபெற உள்ளது. அனைத்து போட்டிகளுக்கும் வட்டார மற்றும் மாவட்ட அளவில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளாக பரிசு கூப்பன்கள் வழங்கப்படும். பரிசு கூப்பன்களில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைகளுக்கேற்ப மாணவ, மாணவிகள் விரும்பும் புத்தகங்களை புத்தக அரங்குகளில் பெற்றுக்கொள்ளலாம்.
மேற்சொன்ன போட்டிகளில் அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ள வேண்டும். நடைபெற உள்ள ஆறாவது புத்தகத்திருவிழாவில் பள்ளிச்சீருடையுடன் பங்குபெறும் பள்ளி மாணவ, மாணவிகள் புத்தகத் திருவிழாவில் வாங்கும் புத்தகங்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படும்.
பள்ளி மாணவ மாணவிகள் உண்டியல் மூலம் சேர்த்து வைத்த பணத்தை கொண்டு புத்தகங்களை வாங்க உண்டியல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. உண்டியல் மூலம் அதிக தொகை சேகரிக்கப்பட்டு புத்தகம் வாங்கும் பள்ளிகளுக்கு முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும்.
மேலும் அனைத்து பள்ளி ஆசியர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தக மதிப்பாய்வு, என்னை செதுக்கிய புத்தகம், நான் படித்த சிறந்த புத்தகம் போன்ற தலைப்புகளில் போட்டிகள் நடைபெறும். மேற்காணும் போட்டிகளில் அனைத்து பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்ள நூலகங்களில் சிறந்த நூலகங்கள் உள்ள பள்ளிகளுக்கு (தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி) முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. மேற்சொன்ன நூலகத்தில் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் சேர்க்கை இருக்க வேண்டும். மேலும் Book Fair Wall என்ற தலைப்பில் நடைபெற உள்ள போட்டிக்கும் பள்ளி வாரியாக (நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி) முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
புத்தகத் திருவிழா நடைபெற உள்ளதை தபால் அட்டைகள் மூலம் பள்ளி மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் மூலம் தங்களது உறவினர்களுக்கு புத்தகத் திருவிழா தொடர்பாக தபால் அட்டைகள் அனுப்புமாறும், அதன்படி அதிக அளவில் புத்தகத் திருவிழா தொடர்பாக தபால் அட்டைகள் அனுப்பும் பள்ளிகளுக்கு முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. மேற்சொன்ன புத்தகத் திருவிழாவில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.