சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த இளைஞரை தீவிரமாக தேடினர்.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டம் கலிஞ்ஜர் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளார். இந்நிலையில், இந்த சிறுமியை பக்கத்து வீட்டில் வசிக்கும் 20 வயது இளைஞர் நேற்று தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
தனக்கு நடந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த இளைஞரை தீவிரமாக தேடினர்.
இளைஞர் கலிஞ்ஜரில் உள்ள காட்டுபகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று இரவு அப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த இளைஞர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு போலீசார் மீது சுட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், பதிலடி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.
இதில், போலீசார் சுட்டதில் இளைஞரின் 2 கால்களிலும் குண்டு பாய்ந்தது. இதையடுத்து, இளைஞரை கைது செய்த போலீசார் , அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக இளைஞரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இளைஞரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் இதுவரை வெளியிடவில்லை.