சத்தீஷ்காரில் கைதான கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு கேரள அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.;

Update:2025-08-02 15:39 IST

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் பகுதியை சேர்ந்த 3 பெண்களை கடத்தி, அவர்களை மதமாற்றம் செய்ய முயற்சி நடப்பதாக பஜ்ரங் தல் அமைப்பை சேர்ந்த நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த ஜூலை 25-ந்தேதி துர்க் ரெயில் நிலையத்தில் கேரளாவை சேர்ந்த பிரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ் ஆகிய 2 கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் மற்றும் சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த சுக்மான் மாண்டவி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதற்கு கேரளாவில் உள்ள கிறிஸ்தவ பேராயர்கள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. வேலைக்கு அழைத்து வருவதற்காகவே அந்த 3 இளம் பெண்களை கன்னியாஸ்திரிகள் ரெயிலில் அழைத்து வந்ததாக கிறிஸ்தவ கூட்டமைப்பு விளக்கம் அளித்தது.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிடக்கோரி கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அவசர கடிதம் அனுப்பினார். மேலும் ராகுல்காந்தி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போன்ற தலைவர்களும் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.

இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகளுக்கு பிலாஸ்பூரில் உள்ள சிறப்பு என்.ஐ.ஏ. நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது. இதற்கு கேரள மாநிலத்தில் உள்ள ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் மற்றும் கிறிஸ்தவ பேராயர்கள் கூட்டமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கேரள கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் இந்த கைது நடவடிக்கைக்கு பின்னால் இருக்கும் அரசியல் நோக்கம் தெளிவாக உள்ளது.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அட்டூழியங்கள் மற்றும் துன்புறுத்தல்கள் குறித்து பா.ஜ.க. மவுனமாக இருக்கிறது. ஆனால் கேரளாவில் அரசியல் ஆதாயங்களுக்காக சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் போல் பா.ஜ.க. இரட்டை வேடம் போடுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்