பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு ஆயுள் தண்டனை- கோர்ட்டு அதிரடி

பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-08-02 16:34 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி ஜனதாதளம் (எஸ்) கட்சியின் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா. இவர், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் ஆவார். இவருடைய தந்தை முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணா ஆவார். இந்த நிலையில், வேலைக்கார பெண் உள்பட 4 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதுபற்றி சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்குகளில் பிரஜ்வல் ரேவண்ணா போலீசாரால் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த 4 வழக்குகளில் மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகரை சேர்ந்த வேலைக்கார பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெங்களூரு சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்திருந்த வழக்கும் ஒன்றாகும்.

இந்த வழக்கில் விசாரணையை முடித்து பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து சிறப்பு கோர்ட்டில் அந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. கடந்த 18-ந் தேதியே இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றது. இதையடுத்து, வழக்கின் தீர்ப்பு நேற்று அளிக்கப்பட்டது.

இதில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பளித்தது. தண்டனை விவரம் இன்று அளிக்கப்படும் என்று கோர்ட்டு தெரிவித்து இருந்த நிலையில், இன்று பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு எதிரான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. இதன்படி, பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்