500 கோடி முறை பெண்கள் இலவச பஸ் பயணம்; கோல்டன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சக்தி திட்டம்

பெண்கள் சமூக, பொருளாதார மற்றும் கல்வி சார்ந்த நிலையில் அதிகாரம் பெற இந்த திட்டம் உதவிடும் என முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.;

Update:2025-08-19 16:52 IST

AI கோப்புப்படம்

பெங்களூரு,

கர்நாடகாவில் 2023-ம் ஆண்டு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்திய காங்கிரஸ் கட்சி, அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அக்கட்சி அளித்த 5 உத்தரவாத திட்டங்களில் ஒன்றான சக்தி திட்டத்தின்படி, அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

இதனால், வேலைக்கு செல்லும் பெண்கள் பெருமளவில் பயன் பெற்றனர். தனி நபர் வருவாயும் அதிகரித்து உள்ளது. 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 11-ந் தேதி இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி, கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி வரை கர்நாடக பெண்கள் அரசு பஸ்களில் 500 கோடி முறை இலவச பயணம் மேற்கொண்டுள்ளனர். தினசரி மாநிலத்தில் 80 லட்சம் பெண்கள் பயணம் செய்கின்றனர் என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

நாட்டில் பல்வேறு நகரங்களில் பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டம் அமலில் உள்ளது. இதில் கர்நாடகாவில் இலவச பயண திட்டத்தின் கீழ், அரசு பஸ்களில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் இந்த சக்தி திட்டம் கோல்டன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளது.

இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, பெண்கள் சமூக, பொருளாதார மற்றும் கல்வி சார்ந்த நிலையில் அதிகாரம் பெற இந்த திட்டம் உதவிடும் என முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் தெரிவித்தனர்.

இதேபோன்று, கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்திற்கு சமீபத்தில், 2025-ம் ஆண்டுக்கான 2 விருதுகள் கிடைத்தன. அமைப்பு கட்டமைப்பு மற்றும் சிறந்த ஆள்சேர்ப்பு திட்டம் ஆகிய 2 விருதுகள் சிங்கப்பூரின் பான் பசிபிக் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியின்போது வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்