தேர்தல் ஆணையம் எதிா்க்கட்சிகளை மிரட்டுகிறது; சித்தராமையா குற்றச்சாட்டு
ஜனநாயகம் நம்பிக்கையை சார்ந்தது. அந்த நம்பிக்கை உடைக்கப்பட்டுள்ளது என்று சித்தரமையா கூறியுள்ளார்.;
பெங்களூரு,
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
ராகுல் காந்தி ஓட்டு திருட்டு குறித்து ஆதாரங்களை வெளியிட்டாா். இறுதியில் தேர்தல் ஆணையம் வெளியே வந்து விளக்கம் அளித்துள்ளது. ஆனால் இந்த விளக்கம் அளித்தபோது, தேர்தல் ஆணையத்தின் முகமூடி கழன்றுள்ளது. நடுநிலையை நடுவராக செயல்படுவதை விட்டுவிட்டு பா.ஜனதா எழுதி கொடுத்ததை நேரடியாக வந்து படித்தது போல் தெரிகிறது.
ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை. தேர்தல் ஆணையம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் ஆணவம் தெரிந்தது. அந்த ஆணையம் என்ன பேசுகிறதோ அதை ஏற்க வேண்டும் என்பது போல் இருந்தது. தேர்தல் ஆணையம் மீது நம்பகத்தன்மை இல்லை.
தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளை மிரட்டும் வகையில் நடந்து கொள்கிறது.பிரச்சினை வெளிப்படையாக தெரிவதால் அதை மூடிமறைப்பது சரியல்ல. ஒவ்வொரு வாக்காளரின் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க வேண்டியது தேர்தல் ஆணைத்தின் கடமை ஆகும். ஜனநாயகம் நம்பிக்கையை சார்ந்தது. அந்த நம்பிக்கை உடைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.