யுபிஐ பயன்படுத்துறீங்களா? அக்.1க்கு பிறகு இந்த வசதி இருக்காது: வெளியான தகவல்
தனிநபர்களுக்கு இடையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான 'கலெக்ட் ரெக்யூஸ்ட்' அம்சத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.;
இந்தியர்களின் ஆன்லைன் பரிவர்த்தனைகள் முக்கிய பங்காக மாறிவிட்டது. டீக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக ஜிபே, போன்பே, உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி யுபிஐ பரிவர்த்தனையை பயன்படுத்தி வருகிறார்கள். வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள யுபிஐ ஐடி மூலம் சில வினாடிகளில் பரிவர்த்தனை செய்ய முடியும். இந்த வகை பரிவர்த்தனை வேகமாகவும் இருப்பதால், பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. யுபிஐ களில் நடைபெறும் மோசடிகளை தவிர்க்கும் விதமாகவும் பயனர்களின் வசதியை மேம்படுத்தும் விதமாகவும் அவ்வப்போது புதிய அப்டேட்களை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் அக்டோபர் 1, 2025 முதல் தனிநபர்களுக்கு இடையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான ' கலெக்ட் ரெக்யூஸ்ட்' அம்சத்தை நிறுத்த முடிவு செய்துள்ளது. மோசடி மற்றும் தவறான பயன்பாடுகளைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கலெக் ரெக்யூஸ்ட் ஆப்ஷன் என்பது ஒரு நபர் இன்னொரு நபருக்கு பணம் கேட்டு கோரிக்கை அனுப்புவதாகும். உதாரணமாக, நண்பர்களுடன் உணவகத்தில் பில் தொகையை பிரித்துக் கொள்ளவோ அல்லது கடன் வாங்கிய பணத்தைத் திரும்பப் பெறுமாறு நினைவூட்டவோ இந்த அம்சம் பயன்பட்டது. இந்தக் கோரிக்கையை பெறுபவர் அதை ஏற்றுக்கொண்டோ அல்லது நிராகரித்தோ பணம் அனுப்பலாம். இந்த வசதியை பயன்படுத்தி அதிக மோசடி நடப்பதால், கலெக்ட் ரெக்யூஸ்ட் ஆப்ஷனை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது