காஷ்மீர் மேகவெடிப்பில் 61 பேர் பலி; தலைமை செயலாளர் தகவல்

இரவு பகலாக நடந்த மீட்பு பணியில் இதுவரை 116 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.;

Update:2025-08-17 23:38 IST

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட கிஷ்த்வார் மாவட்டம் சிசோடி கிராமத்தில் கடந்த 14-ந்தேதி திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் சிக்கி கொண்டனர்.

இதுபற்றி மத்திய மந்திரி ஜிதேந்திரா சிங் கூறும்போது, மச்சைல் மாதா கோவில் அருகே நடந்த இந்த மேகவெடிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அச்சம் தெரிவித்த நிலையில், வெள்ளபெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

காஷ்மீர் காவல் துறை, மாநில பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு படைகள், சி.ஐ.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப். உள்ளிட்ட படைகளும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன.

இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் தலைமை செயலாளர் அடல் துல்லூ செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, கிஷ்த்வார் மேகவெடிப்பில் 61 பேர் பலியாகி உள்ளனர்.

சி.ஐ.எஸ்.எப்., ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீஸ், சி.ஆர்.பி.எப்., பி.ஆர்.ஓ., இந்திய ராணுவம் மற்றும் என்.எச்.பி.சி. உள்ளிட்ட துறையை சேர்ந்தவர்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்று தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இரவு பகலாக நடந்த மீட்பு பணியில் இதுவரை 116 பேர் மீட்கப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.

இந்த வெள்ளத்தில், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக முகாம்கள், பாலங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. இயல்பு வாழ்க்கை முடங்கி போயுள்ளது. தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணி நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்