திருத்தணி முருகப்பெருமானுக்கு திருப்பதி ஏழுமலையானின் பட்டு வஸ்திரம் சமர்ப்பணம்

திருத்தணி சுப்பிரமணிய சுவாமிககு பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்கள பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் வழங்கினார்.;

Update:2025-08-17 15:22 IST

திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா கோலாகலமாக நடந்தது. அதையொட்டி திருத்தணி சுப்பிரமணியசாமிக்கு பாரம்பரியமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

அதற்காக, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு தலைமையில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் கொண்ட ஒரு குழுவினர் நேற்று திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வந்தனர். கோவிலுக்கு வந்த அவர்களுக்கு திருத்தணி சுப்பிரமணியசாமி கோவில் தலைவர் ஸ்ரீதர் மற்றும் அறநிலையத்துறை இணை ஆணையர் ரமணி ஆகியோர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து மங்கள வாத்தியங்கள் இசைக்க திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு மற்றும் குழுவினர் ஊர்வலமாக சென்று திருத்தணி சுப்பிரமணியசாமிக்கு பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்கள பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை வழங்கினர்.

அதன்பிறகு வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசாமியை தரிசனம் செய்ததும், கோவில் அர்ச்சகர்கள் அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடுவுக்கு வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினர். தொடர்ந்து அவருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்து பிரசாதம் வழங்கினர்.

கோவிலில் இருந்து வெளியே வந்ததும், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு நிருபர்களிடம் கூறுகையில், ‘திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திருத்தணி சுப்பிரமணியசாமிக்கு பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

அதேபோல் இந்த ஆண்டு நான் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆடிக்கிருத்திகை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருத்தணிக்கு சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். அனைத்துப் பக்தர்களுக்கும் சுப்பிரமணியசாமியின் தெய்வீக அருள், ஆசி கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்’ என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்