திருச்செந்தூர் ஆவணி திருவிழா: குமரவிடங்க பெருமான், வள்ளி அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை

நாளை மாலை சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சிவன் அம்சமாக சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.;

Update:2025-08-19 12:07 IST

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமியும், அம்பாளும் காலை மற்றும் மாலையில் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்கள் காட்சி கொடுக்கின்றனர்.

ஆவணித் திருவிழாவின் 5-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விசுவரூப தீபாராதனையும், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடந்தது. இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில் பிரதான வாயில் சாத்தப்பட்டது அங்கு சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளினர். பின்னர் பிரதான வாயில் திறக்கப்பட்டவுடன் குடவருவாயில் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கீழ ரதவீதி பந்தல் மண்டப முகப்பில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி இருந்த சுவாமி ஜெயந்திநாதருக்கு எதிர்சேவை தீபாராதனை நடந்தது.

நாளை சிவப்பு சாத்தி

7-ம் திருநாளான நாளை (புதன்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் சுவாமி சண்முகரின் உருகு சட்டசேவை நடக்கிறது. காலை 9 மணியளவில் சுவாமி சண்முகர் சண்முகவிலாச மண்டபத்தில் இருந்து வெற்றிவேர் சப்பரத்தில் பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்று மாலை 4.30 மணியளவில் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சிவன் அம்சமாக சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. 8-ம் திருநாளான நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அதிகாலையில் சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்திலும், பகல்10.30 மணிக்கு மேல் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்த பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். 10-ம் திருநாளான 23-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்