பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா: வெள்ளி கேடய வாகனத்தில் பவனி வந்த கற்பக விநாயகர்

வருகிற 27-ந்தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பக விநாயகர் எழுந்தருள்கிறார்.;

Update:2025-08-19 17:28 IST

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான சதுர்த்தி விழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரம் அருகே உற்சவர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சண்டிகேசுவரர் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளினர். தொடர்ந்து காலை 10 மணிக்கு பிச்சை குருக்கள் தலைமையில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. கொடிமரத்திற்கு பல்வேறு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

விழா நாட்களில் இரவில் விநாயகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். நேற்று இரவு மூஷிக வாகனத்தில் வீதி உலா வந்தார். இன்று காலையில் வெள்ளி கேடய வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு சிம்ம வாகனத்தில் பவனி வருகிறார். நாளை பூத வாகனத்திலும், 4-ம் நாள் கமல வாகனத்திலும், 5-ம் நாள் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

6-ம் நாளான வருகிற 23-ந்தேதி, கஜமுக சூரசம்ஹாரம் நடக்கிறது. 7-ம் நாள் இரவில் மயில் வாகனத்திலும், 8-ம் நாள் வெள்ளி குதிரை வாகனத்திலும் உற்சவர் எழுந்தருள்கிறார். 9-வது நாளான வருகிற 26-ந்தேதி மாலையில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.

10-ம் நாளான வருகிற 27-ந்தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பகவிநாயகர் எழுந்தருள்கிறார். அதன் பின்னர் கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது. தொடர்ந்து உச்சிகால சிறப்பு பூஜைகள் மற்றும் மூலவருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் நடக்கிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி பழனியப்ப செட்டியார் மற்றும் நச்சாந்துபட்டி குமரப்ப செட்டியார் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்