திருமணமான 10-வது நாளில் கர்ப்பமான மனைவி... கணவன் அதிர்ச்சி

என்னை மன்னித்து விடுங்கள் என கணவரிடம் கண்ணீர் விட்டு கதறினார்.;

Update:2025-07-26 16:00 IST

சேலம்,

10-வது நாளில் கர்ப்பம்

சேலத்தில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் கம்பேனியில் வேலை பார்த்து வந்த இளம்பெண், கடந்த ஜனவரி மாதம் அம்மாப்பேட்டையை சேர்ந்த ஒருவருடன் திருமணம் செய்துகொண்டார். திருமணமான 10 நாளில் அந்த பெண் வாந்தி எடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த புது மாப்பிள்ளை மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அந்த இளம்பெண் 2 மாதம் கர்ப்பிணியாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர். இதனை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த புது மாப்பிள்ளை, திருமணமாகி 10 நாளில் எப்படி 2 மாதம் கர்ப்பம் என்று மனைவியிடம் கேட்டார்.

மற்றொரு நபருடன் பழக்கம்

அப்போது கதறி அழுத அந்த இளம் பெண் என்னை மன்னித்து விடுங்கள் என கண்ணீர் விட்டு கதறினார். மேலும் தன்னுடன் வேலை பார்த்தவருடன் ஏற்பட்ட பழக்கம் குறித்த விவரத்தையும் கணவரிடம் கண்ணீர் மல்க தெரிவித்தார். அவர் கூறுகையில்,

தன்னுடன் பணியாற்றிய சசிசேகர் என்பவருடன் பேசி பழகி வந்தேன். இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்கிடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவருடன் நெருக்கமாக இருந்ததால், தற்போது கர்ப்பம் அடைந்துள்ளேன் எனக்கூறியுள்ளார்.

கரு கலைப்பு

இதையடுத்து கருவை கலைத்து விட முடிவு செய்த புது மாப்பிள்ளை சசிசேகரை தேடி சென்றார். அவர் அப்போது தனது நண்பரான கோபால் என்பவரையும் உடன் அழைத்து சென்றார். சசிசேகரை பிடித்து எச்சரித்த 2 பேரும் கருவை கலைக்க ரூ.80 ஆயிரம் பணம் கேட்டனர். கொடுக்காவிட்டால் போலீசில் புகார் அளிப்போம் எனவும் கூறியுள்ளனர். இதனால் பயந்துபோன சசிசேகர், உடனடியாக கேட்ட பணத்தை கொடுத்துவிட்டார். இதையடுத்து மனைவியின் கருவை கலைத்த புதுமாப்பிள்ளை, தனது மனைவியுடன் தொடர்ந்து குடும்பம் நடத்தி வந்தார்.

பணம் பறிப்பு

இதற்கிடையே, புது மாப்பிள்ளையுடன் சென்ற கோபால், சசிசேகரை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டார். அதன்படி, சேலத்தை சேர்ந்த பிரபல ரவுடிகளை அழைத்து சசிசேகரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். மேலும் கேட்ட பணத்தை கொடுக்கவில்லை என்றால் அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிடு வோம், பின்னர் நீ சிறைக்கு சென்று விடுவாய் என்று மிரட்டினர். இதனால் பயந்து போன சசிசேகர் ரூ.9 லட்சம் பணத்தை கொடுத்தார்.

வாங்கிய பணத்தை கோபால் கும்பல், அவரிடம் தொடர்ந்து பணம் பறிக்க முடிவு செய்தனர். அதன்படி மேலும் ரூ.10 லட்சம் பணம் . கொடுத்தால் இந்த பிரச்சினையை முடித்து விடலாம் இல்லை என்றால் சிக்கலில் இருந்த தப்பிக்கவே முடியாது என்று மிரட்டினர்.. இதனால் செய்வதறியாது திகைத்த சசிசேகர், போலீசிலும் புகார் கொடுக்க முடிவு செய்தார். அதன்படி அழகாபுரம் போலீசில்புகார் கொடுத்த அவர் இந்த பிரச்சினையில் இருந்து தன்னை காப்பாற்றுமாறு கதறினார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் அந்த பெண்ணின் கணவரின் நண்பரான கோபால் மற்றும் பிரபல ரவுடிகளான மோகன் என்ற பாஸ்ட்புட் மோகன், பூமாலை ராஜன், உலகநாதன் ஆகிய 4 பேர் மீதும் மிரட்டி ரூ.9 லட்சம் பணம் பறித்ததாக வழக்கு பதிவு செய்து அவர்களை தேடினர். அப்போது 4 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தற்போது தேடி வருகின்றனர். 

 

மேலும் செய்திகள்