காதல் மனைவியை கொன்றது ஏன்? - கைதான மினி பஸ் டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்
காதல் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.;
நெல்லை,
நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 37) மினிபஸ் டிரைவர். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரத்தினமணியன்குடியை சேர்ந்த ஜாய்ஸ் (30) என்ற பெண்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக காதல் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில், கடந்த 29-ந்தேதி அதிகாலையில் திடீரென ஜாய்ஸ் தலையில் காயத்துடன் மயக்கமான நிலையில் 108 ஆம்புலன்ஸ் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் ஜாய்ஸ் சாவு குறித்து முத்துக்குமாரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். முதலில் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக நாடகமாடிய அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். அவரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மனைவியை அவர் அடித்து கொன்றதாக ஒப்புக்கொண்டார்.
அப்போது அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், காதல் திருமணம் செய்த எங்களது வாழ்க்கை சந்தோசமாக சென்று கொண்டிருந்தது. கடந்த சில மாதங்களாக அவளது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அவளிடம் நான் கேட்டதால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பத்தன்றும், அவளது நடத்தை குறித்து நான் கேட்டதால் ஏற்பட்ட தகராறு முற்றியதில், பூரி கட்டையால் தலையில் தாக்கினேன்.
இதில் அவளுக்கு தலையில் காயம் ஏற்பட்டு கீழே விழுந்தாள். அவள் மயக்கம் தெளியாமல் இருந்ததால் பயந்து போன நான், பின்னர் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி வரவழைத்தேன். அந்த ஆம்பலன்சில் மனைவியை ஏற்றி கொண்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தேன். அங்கு அவளை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து கொலையை மறைக்க முயற்சித்தேன். போலீசாரின் தீவிர விசாரணையில் சிக்கி கொண்டேன், என தெரிவித்தார். இதையடுத்து முத்துக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.