குழந்தைகளை சிரிக்க வைக்க தந்தை விபரீத முயற்சி: தொட்டில் கயிறு எமனான அதிர்ச்சி சம்பவம்
தொட்டில் கயிறை கழுத்தில் சுற்றி விளையாடிய எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.;
மதுரை கோ.புதூர் காந்திபுரம் மணிமாறன் தெரு பகுதியை சேர்ந்தவர் முருகானந்த கோபால் (வயது 38). தனியார் மருத்துவமனையில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்துவந்தார். இவருக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
நேற்று முன்தினம் தனது குழந்தைகளை சிரிக்க வைக்க விபரீதமாக தொட்டில் கயிற்றை தனது கழுத்தில் சுற்றிக்கொண்டு முருகானந்த கோபால் விளையாடி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு கழுத்தில் இறுக்கி உயிருக்கு போராடினார். சற்று நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த புதூர் போலீசார், விரைந்து சென்று உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபரீத சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.