எடப்பாடி பழனிசாமி 3-ம் கட்ட சுற்றுப்பயணம்: 11-ந் தேதி கிருஷ்ணகிரியில் தொடங்குகிறார்
கிருஷ்ணகிரியில் எடப்பாடி பழனிசாமி 3-ம் கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.;
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசார பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் வருகிற 11-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை எடப்பாடி பழனிசாமி 3-ம் கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, 11.8.2025 முதல் 23.8.2025 வரை 3-ம் கட்டமாக, கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, சட்டமன்றத் தொகுதி வாரியாக, 'எழுச்சிப் பயணம்' - தொடர் பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்கள்.
எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணத்திற்கான ஏற்பாடுகளை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 'எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணத்தின்' போது சம்பந்தப்பட்ட கழக மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டப் பொறுப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.