வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவன்.. அடுத்து நடந்த நெஞ்சை உலுக்கிய சம்பவம்
பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் விளக்கம் அளித்துள்ளார்.;
விழுப்புரம் மாவட்டத்தில் திரு.வி.க.வீதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விழுப்புரம் நகரப் பகுதியான விராட்டிக் குப்பத்தைச் சேர்ந்த மகேஸ்வரியின் மகன் மோகன்ராஜ் (17) பிளஸ் 1 படித்து வருகிறார். இந்த நிலையில், மாணவர் மோகன்ராஜ் இன்று வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட்டு சென்றா்.
அங்கு, பள்ளியில் காலை 7 மணி அளவில் நடைபெற்ற சிறப்பு வகுப்பில் கலந்து கொண்டார். அப்போது, பள்ளி வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவர் மோகன்ராஜ் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே, சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அந்த மாணவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு, மாணவர் மோகன்ராஜை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த மாணவருக்கு மூச்சு திணறல் இருப்பதாகவும், இங்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதால், உடனே மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினர். அங்கிருந்து, அரசு மருத்துவமனைக்கு மாணவரை கொண்டு சென்றனர்.
அங்கு, மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள் மோகன்ராஜ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தையடுத்து அந்த தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி வகுப்பறையில் மாணவர் மயங்கி விழுந்த சம்பவம் வகுப்பறையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விழுப்புரம் தாலுகா போலீசார் மாணவர் மோகன் ராஜின் தாய் மகேஸ்வரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, மாணவர் மோகன்ராஜ்க்கு ஏற்கனவே உடல் உபாதை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் சுமார் 50- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் கூறுகையில், “மாணவன் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவன் திடீரென மயங்கினார். உடனடியாக மானவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்” என்று அவர் கூறினார்.