பவானிசாகர் அணையிலிருந்து 135 நாட்கள் பாசனத்திற்காக நீர் திறப்பு
பவானிசாகர் அணையிலிருந்து நீர் திறக்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.;
கோப்புப்படம்
தமிழக அரசின் நீர்வளத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து 2025-2026-ம் ஆண்டு, முதல்போக பாசனத்திற்கு, கீழ்பவானித் திட்டப் பிரதானக் கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மூலமாக 1,03,500 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 31.07.2025 முதல் 14.08.2025 முடிய நாளொன்றுக்கு 2300 கனஅடி/விநாடி வீதம் 15 நாட்கள் சிறப்பு நனைப்பிற்கு 2,980.80 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் 15.08.2025 முதல் 12.12.2025 முடிய 120 நாட்களுக்கு, முதல்போக நன்செய் பாசனத்திற்கு 23846.40 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் ஆக மொத்தம் 135 நாட்களுக்கு 26,827.20 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால், ஈரோடு மாவட்டத்திலுள்ள ஈரோடு, கோபி, பவானி, பெருந்துறை, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி ஆகிய வட்டங்களிலுள்ள நிலங்களும், திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் வட்டத்திலுள்ள நிலங்களும் மற்றும் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி வட்டத்திலுள்ள நிலங்களும் என மொத்தம் 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.