கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
மேம்பால பணிகள் காரணமாக மேட்டுப்பாளையம் சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.;
கோவை,
மேம்பால பணிகள் காரணமாக மேட்டுப்பாளையம் சாலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக கோவை மாநகர காவல்துறை அறிவித்து உள்ளது.
போக்குவரத்து மாற்றம்
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபாகாலனியில் அழகேசன் ரோடு சந்திப்பு முதல் எருக்கம்பெனி வரை 1 கி.மீ. தூரத்துக்கு ரூ.75 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக தூண்கள் அமைக்கும் பணி, தாங்கு தூண்கள் அமைப்பது உள்பட பல்வேறு பணிகள் என மொத்தம் 75 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளன.
மின்சார கம்பிகளை மாற்றி அமைப்பது உள்பட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 90 நாட்களுக்கு இந்த ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக கோவை மாநகர காவல்துறை சார்பில் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மேட்டுப்பாளையம் சாலை
காந்திபுரம், பூமார்க்கெட், வடகோவை, மேட்டுப்பாளையம் சாலை வழியாக செல்லும் பஸ்கள், சரக்கு வாகனங்கள் உள்பட அனைத்து கனரக வாகனங்களும் வடகோவை அவினாசிலிங்கம் கல்லூரியில் இருந்து இடதுபுறம் திரும்பி, பாரதி பார்க் ரோடு வழியாக சென்று ஜி.சி.டி. கல்லூரி ரவுண்டானாவில் வலதுபுறம் திரும்பி தடாகம் சாலை வழியாக, வெங்கிட்டாபுரம், கோவில்மேடு, இடையர்பாளையம் சென்று, அங்கிருந்து கவுண்டம்பாளையம் சாலையை அடைந்து துடியலூர் வழியாக மேட்டுப்பாளையம் செல்லலாம். கவுண்டம்பாளையம் வழியாக கோவை மாநகருக்குள் வரும் அனைத்து இலகுரக மற்றும் கனரக வாகனங்களும் வழக்கம் போல் வருவதற்கு அனுமதிக்கப்படுகிறது. காந்திபுரம், அவினாசி ரோடு செல்லும் வாகனங்கள் நல்லாம்பாளையம் வழியாக கணபதியை அடைந்து காந்திபுரம் வழியாக செல்லலாம்.
முழு ஒத்துழைப்பு
சங்கனூர் சந்திப்பில் இருந்தும் இடதுபுறம் திரும்பி கண்ணப்ப நகர் புதுப்பாலம் வழியாக சிவானந்தா காலனியை அடைந்து காந்திபுரம் செல்லலாம்.
காந்திபுரம் சிவானந்தாகாலனியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பஸ்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் ஏ.ஆர்.சி. சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, கங்கா மருத்துவமனை, அழகேசன் ரோடு சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அழகேசன் ரோடு வழியாக தடாகம் சாலையை அடைந்து வெங்கிட்டாபுரம், கோவில்மேடு, இடையர்பாளையம் வழியாக செல்லலாம்.
என்.எஸ்.ஆர். ரோடு வழியாக மாநகருக்குள் வரும் பஸ்கள் உள்பட அனைத்து கனரக வாகனங்களும் என்.எஸ்.ஆர். ரோடு, ஸ்டேட் பேங்க் சந்திப்பில் வலது புறம் திரும்பி, ராஜா அண்ணாமலை ரோடு வழியாக பாரதி பார்க் ரோடு சென்று இடதுபுறம் திரும்பி அவினாசிலிங்கம் கல்லூரி சந்திப்பு வழியாக மேடடுப்பாளையம் சாலையை அடையலாம். இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.