ராமேஸ்வரம் மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்
மீனவர்கள், படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் நேற்று முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கினர்.;
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 55 நாட்களில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம், வவுனியா சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
2 நாட்களுக்கு முன்புகூட ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததுடன், அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தது.
ராமேசுவரம், பாம்பன் உள்பட அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாரம்பரிய கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையின் எந்த பிரச்சினையும் இன்றி மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
இதனால் ராமேசுவரம் துறைமுக கடல் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கவும், படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தசூழலில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் தங்கச்சிமடம் வலசை பஸ் நிறுத்தம் அருகே அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், சுதந்திர தினத்தன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருப்பது, 19-ந்தேதி ரெயில் மறியல் நடத்துவது என மீனவர்கள் முடிவெடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.