தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம்: எடப்பாடி பழனிசாமி இன்று சிவகங்கை வருகை
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தென்மாவட்டங்களில் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.;
சிவகங்கை,
தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கினார். சட்டசபை தொகுதி வாரியாக "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'' என்ற பெயரில் அவர் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
சிவகங்கை
வடமாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் மக்களை சந்தித்த அவர், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இதன்படி இன்று சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். இன்று மாலை 4.30 மணி அளவில் காரைக்குடி எம்.ஜி.ஆர். சிலை அருகில் அவர் பேசுகிறார். பின்னர் மாலை 5.30 மணி அளவில் திருப்பத்தூர் அண்ணா சிலை அருகில் பேசுகிறார். இரவு 7.45 மணி அளவில் சிவகங்கை அரண்மனை வாசலில் பேசுகிறார். இன்று இரவு எடப்பாடி பழனிசாமி சிவகங்கையில் தங்குகிறார்.
நாளை (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் சிவகங்கை சன்ராக்ஸ் மகாலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள், மஞ்சுவிரட்டு பந்தயம், வடமாடு நலச்சங்கம், விவசாய சங்கம், விளையாட்டு வீரர்கள், தென்னை நார் உற்பத்தியாளர் சங்கத்தினருடன் கலந்துரையாடுகிறார். மாலை 4.30 மணி அளவில் மானாமதுரை தேவர் சிலை அருகில் அவர் பேசுகிறார். தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு செல்கிறார்.
சிவகங்கை மாவட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி வருவதையொட்டி அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், காளியாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. சிவகங்கை மாவட்டத்துக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்க வேண்டும் என மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராமநாதபுரம்
தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி முதலில் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் நாளை மாலை 6.30 மணி அளவில் பஸ் நிலையப் பகுதியில் மக்களை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து 2-வது தொகுதியாக திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு செல்லும் எடப்பாடி பழனிசாமி நாளை இரவு 8 மணி அளவில் ஆர்.எஸ்.மங்கலம் பஸ் நிலைய பகுதியில் மக்களை சந்தித்து பேசுகிறார்.
இதன் பின்னர் ராமநாதபுரம் வரும் அவர் இரவு தனியார் விடுதியில் தங்குகிறார். மறுநாள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், மீனவர்கள், பல்வேறு சங்கப் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார்.
இதைத்தொடர்ந்து அன்று 31-ந் தேதி மாலை 4 மணி அளவில் மீண்டும் தனது சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் அரண்மனை பகுதியில் 4 மணி அளவில் மக்களை சந்தித்து பேசுகிறார். முன்னதாக ராமநாதபுரம் ரோமன் சர்ச் பகுதியில் இருந்து அரண்மனை வரை ரோடு ஷோ நடத்தும் எடப்பாடி பழனிசாமி அதன்பின்னர் அரண்மனையில் மக்களை சந்தித்து பேசுகிறார்.
4-வது சட்டமன்ற தொகுதியாக முதுகுளத்தூர் செல்லும் எடப்பாடி பழனிசாமி, அன்று மாலை 6.30 மணி அளவில் பஸ் நிலைய பகுதியில் மக்களை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 2 நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்யும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் விதமாக மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், காளியாட்டம் போன்ற கலை நிகழ்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அவரை வரவேற்று பேனர்கள், பிளக்ஸ்போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் வரவேற்பு தோரண வாயில்கள், வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.