மாநில காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி: பதக்கம் வென்றவர்களுக்கு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு
செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு அதிதீவிரப்படை துப்பாக்கி சுடு தளத்தில் 2025-ம் ஆண்டுக்கான மாநில காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டியின் நிறைவு விழா நடைபெற்றது.;
தமிழ்நாடு காவல்துறையானது ஆண் மற்றும் பெண் காவலர்களின் துப்பாக்கி சுடும் திறமைகளை அங்கீகரிக்கவும் அவர்களின் துப்பாக்கி சுடும் திறன்களை மேம்படுத்தவும் ஒவ்வொரு வருடமும் மாநில அளவிலான காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டிகளை நடத்தி வருகிறது.
இப்போட்டியானது இந்த வருடம் செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அதிதீவிரப்படை/ பள்ளி பயிற்சி மையம்/ துப்பாக்கி சுடு தளத்தில் 24.7.2025 முதல் 26.7.2025 வரை ஆண்களுக்கான போட்டிகள் தனியாகவும் பெண்களுக்கான போட்டிகள் தனியாகவும் நடத்தப்பட்டன. இதில் மொத்தம் 13 வகையான போட்டிகள் 3 பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டது. ரைபில் பிரிவு (5 போட்டிகள்), பிஸ்டல்/ ரிவால்வர் பிரிவு (4 போட்டிகள்) மற்றும் கார்பைன்/ஸ்டன் கன் பிரிவு (4 போட்டிகள்). இப்போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறையின் பல்வேறு நகரங்கள், மண்டலங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் 204 ஆண் போட்டியாளர்கள் 9 அணிகளாகவும் 101 பெண் போட்டியாளர்கள் 8 அணிகளாகவும் கலந்து கொண்டனர்.
இன்று (26.7.2025) நடைபெற்ற நிறைவு விழாவில் மேற்சொன்ன துப்பாக்கி சுடும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் வெற்றி பெற்ற அணிகளுக்கும் தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் சுழற் கேடயங்களை அளித்து வாழ்த்துரை வழங்கினார்.
ஆண்களுக்கான மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி-2025ன் ஒட்டுமொத்த சாம்பியன்சிப் கோப்பையை தெற்கு மண்டலம் அணி வென்றது. அதுபோல தலைமையிட அணி ஒட்டுமொத்த சாம்பியன்சிப் இரண்டாமிட கோப்பையையும், ஆயதப்படை அணி ஒட்டுமொத்த சாம்பியன்சிப் மூன்றாமிட கோப்பையையும் வென்றன. மேலும் பெண்களுக்கான மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி-2025ன் ஒட்டுமொத்த சாம்பியன்சிப் கோப்பையை மேற்கு மண்டலம் அணி வென்றது. அதுபோல வடக்கு மண்டலம் அணி ஒட்டுமொத்த சாம்பியன்சிப் இரண்டாமிட கோப்பையையும், சென்னை மாநகர காவல் அணி ஒட்டுமொத்த சாம்பியன்சிப் மூன்றாமிட கோப்பையையும் வென்றன.
இவை தவிர ஆண்கள் பிரிவில் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு ஒட்டுமொத்த பெஸ்ட் ஷாட் மெடல் ரிவால்வர்/பிஸ்டல் பிரிவிலும் கார்பைன்/ஸ்டன் கன் பிரிவிலும் வழங்கப்பட்டன. இதே போல் பெண்கள் பிரிவில் சிறந்த துப்பாக்கி சுடும் வீராங்கனைகளுக்கு ஒட்டுமொத்த பெஸ்ட் ஷாட் மெடல் ரிவால்வர்/பிஸ்டல் பிரிவிலும் கார்பைன்/ஸ்டன் கன் பிரிவிலும் வழங்கப்பட்டன. அதன் விபரம் பின்வருமாறு:
ஆண்கள் பிரிவில் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்களுக்கான ஒட்டுமொத்த பெஸ்ட் ஷாட் ரிவால்வர்/பிஸ்டல் பிரிவில் முறையே ஆயுதப்படையைச் சேர்ந்த நவீன்குமார் தங்கம், சதிசிவனேஷ் வெள்ளி, மத்திய மண்டலத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்றனர். மேலும் ஆண்கள் பிரிவில் கார்பைன்/ஸ்டன் கன் பிரிவில் முறையே சென்னை மாநகர காவல் துறையைச் சேர்ந்த வினோத்குமார் தங்கம், தெற்கு மண்டலத்தைச் ேசர்ந்த ராஜகுரு வெள்ளி, மத்திய மண்டலத்தைச் சேர்ந்த முருகானந்தம் வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்றனர்.
இதே போல் பெண்கள் பிரிவில் சிறந்த துப்பாக்கி சுடும் வீராங்கனைகளுக்கு ஒட்டுமொத்த பெஸ்ட் ஷாட் ரிவால்வர்/பிஸ்டல் பிரிவில் முறையே ஆவடி நகரத்தைச் சேர்ந்த சுதா தங்கம், வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த நந்தினிதேவி வெள்ளி, வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த ஞான அருள் ராஜாமணி வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்றனர். மேலும் பெண்கள் பிரிவில் கார்பைன்/ஸ்டன் கன் பிரிவில் முறையே மத்திய மண்டலத்தைச் சேர்ந்த கீர்த்தனா தங்கம், ஆவடி நகரத்தைச் சேர்ந்த நந்தினி வெள்ளி, மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த ஈஸ்வரி வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்றனர்.
இந்த போட்டிகள் அனைத்தும் கூடுதல் டிஜிபி (செயலாக்கம்) தினகரன் மேற்பார்வையில் நடைபெற்றன. இப்போட்டிகளுக்கு ஆயுதப்படை ஐஜி விஜயகுமாரி நடுவராக செயல்பட்டார். இப்போட்டிகளுக்கு தமிழ்நாடு அதிதீவிரப்படை/பயிற்சிப்பள்ளி எஸ்.பி. பிரபாகர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். நிறைவு விழாவில் மேற்சொன்ன அதிகாரிகளுடன் செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. சாய் பிரணித், கோயமுத்தூர் மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன் மற்றும் தளவாய்கள் கார்த்திகேயன், செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.