திருநின்றவூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

திருநின்றவூர் நகர காந்தி சிலை எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.;

Update:2025-07-18 10:15 IST

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து, ஆட்சியில் அமர்ந்த விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு, கடந்த 50 மாத காலமாக மக்களின் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றித் தராமல், தனது குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்பட்டு வருவதால், மக்கள் பல்வேறு வகைகளில் இன்னல்களைச் சந்தித்து, மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவது வேதனைக்குரிய விஷயமாகும்.

அந்த வகையில், திருவள்ளூர் தெற்கு மாவட்டம், திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் குப்பைகள் சரிவர அள்ளப்படாத காரணத்தால் சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. கொசுக்களை அழிப்பதற்காக நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் கொசு மருந்து அடிப்பதில்லை. மேலும், இப்பகுதியில் உள்ள சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன. தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை; முறையாக பராமரிக்கப்படுவதில்லை. பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கப்படுவதில்லை. நகராட்சியின் இதுபோன்ற நிர்வாகச் சீர்கேடுகளை சரிசெய்வது குறித்து, நகராட்சி நிர்வாகத்தை அணுகினால் உரிய முக்கியத்துவம் தரப்படுவதில்லை.

இந்நிலையில், திருவள்ளூர் தெற்கு மாவட்டம், திருநின்றவூர் நகராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளை சரிசெய்யாமல் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தின் சார்பில் 25.7.2025 – வெள்ளிக் கிழமை மாலை 4 மணியளவில், திருநின்றவூர் நகர காந்தி சிலை எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக இலக்கிய அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் எஸ்.எஸ். வைகைச்செல்வன் அவர்கள் தலைமையிலும்; கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ளு. அப்துல் ரஹீம், கழக அமைப்புச் செயலாளர் திருவேற்காடு பா. சீனிவாசன், திருவள்ளூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஏ. அலெக்சாண்டர், ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நகர, பகுதிக் கழகச் செயலாளர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மாநகராட்சி, நகராட்சி மன்ற இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசையும்; திருநின்றவூர் நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார் . 

Tags:    

மேலும் செய்திகள்