சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளி சிக்கியது எப்படி..? வெளியான பரபரப்பு தகவல்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், 75 சிசிடிவி கேமராக்களின் உதவியால் வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டார்.;

Update:2025-07-26 12:54 IST


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகா கவரைபேட்டை பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி கடந்த 12-ந்தேதி பள்ளி முடிந்து மதியம் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது இளைஞர், சிறுமியின் வாயை பொத்தி தூக்கி சென்று மாந்தோப்பில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தார்.

இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய வேண்டுமென பொதுமக்கள், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளை, குற்றவாளியை கைது செய்ய 20-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் 14 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

குற்றவாளியை கண்டுபிடிக்க அவரது புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களை போலீசார் பொது இடங்களில் போஸ்டராக ஓட்டினர். குற்றவாளி குறித்து துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, சிறுமியை பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளியை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

வட மாநிலத்தை சேர்ந்த அந்த இளைஞரை, ஆந்திராவின் சூலூர்பேட்டை ரெயில்நிலையம் அருகே தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞரின் பெயர் உள்பட பிற விவரங்களை போலீசார் இதுவரை வெளியிடவில்லை. தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞர், சூலூர்பேட்டையில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளார்.

கஞ்சா போதைக்கு அடிமையான அந்த இளைஞர், ஓட்டலுக்கு கூட செல்லாமல் தொடர்ந்து விடுமுறை எடுத்து வந்து உள்ளார். வாரம் தோறும் சனிக்கிழமை விடுமுறை எடுத்து தமிழக எல்லைப் பகுதியான கிராமங்களுக்கு சுற்றுலா போல வருவது அந்த நபரின் வழக்கமாக இருந்துள்ளது. அதன்படி சம்பவத்தன்று (சனிக்கிழமை - 12ம் தேதி) அந்த இளைஞர் கும்மிடிப்பூண்டிக்கு வந்தது உறுதியானது.

கைது செய்யப்பட்ட இளைஞரின் புகைப்படத்தை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீசார் காண்பித்தபோது அவர்தான் குற்றவாளி என உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது. குற்றவாளி கைது செய்யப்பட்ட தகவல் தெரிந்ததும் நேற்று மாலை சிறுமியின் உறவினர்கள் ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் குவியத்தொடங்கினர்.

இந்நிலையில், சிறுமியின் உறவினர்கள் ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் குவிந்ததால் கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞரை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞரிடம் தனிப்படை போலீசார் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர்.

வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் கைது செய்யப்பட்ட இளைஞரிடம் நேரில் விசாரணை நடத்தினார். கைது செய்யப்பட்ட இளைஞரை சம்பவம் நடைபெற்ற மாந்தோப்பிற்கு நேரில் அழைத்து சென்று அங்கு வைத்து விசாரணை நடத்த உள்ளனர். மேலும், வடமாநில இளைஞரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

குற்றவாளி சிக்கியது எப்படி..? - உதவிய 75 சிசிடிவிக்கள்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக 75 சிசிடிவி கேமராக்களின் உதவியால் வடமாநிலத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பாலியல் வன்கொடுமை நடைபெற்ற பகுதிகளில் இருந்து 75 சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வுசெய்தனர்.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரெயிலில் இளைஞர் பயணிப்பது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது

ரெயில்வே பாதுகாப்புப் படையினருடன் தனிப்படை போலீசார் இணைந்து தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தநிலையில் சூலூர்பேட்டை ரெயில் நிலையத்தில் வைத்து அசாம் இளைஞர் கைதுசெய்யப்பட்டார். மதுபானக்கடைக்கு சென்றுவிட்டு ரெயில் ஏற வந்தபோது சூலூர்பேட்டை ரெயில் நிலையத்தில் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.

போலீசார் கைது செய்யும்போது மதுபோதையில் இருந்த இளைஞர், முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்துள்ளார். போதை தெளிந்த பின்னரே இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சூலூர்பேட்டை தாபாவில் ஆந்திர மாநில போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக கைதான நபரின் புகைப்படத்தை காட்டி விசாரணை நடத்தியநிலையில், தமிழக போலீசார் கைதான வடமாநில வாலிபரை அவர் வேலை செய்ததாக கூறப்படும் தாபாவுக்கு கூட்டிச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.  

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்லப்பட்ட வடமாநில இளைஞர்

இந்த சூழலில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான வடமாநில இளைஞரிடம் விசாரணை நிறைவடைந்ததையடுத்து இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து சென்றனர். இதன்படி பொன்னேரியில் உள்ள மாவட்ட குற்றவியல் நடுவர் வீட்டில் குற்றவாளியை போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர். 

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே சிறுமியை வன்கொடுமை செய்ததாக கைதான இளைஞரிடம் ஐஜி, டிஎஸ்பி, காவல் துறையினர் நடத்திய விசாரணையின் போது, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். முன்னதாக கைதான நபர்தான் தன்னை வன்கொடுமை செய்தவர் என சிறுமியும் உறுதிப்படுத்தி உள்ளார்.

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நபர் மீது மேலும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி மகளிர் காவல்நிலையத்தில் ஏற்கெனவே போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடந்து வரும் நிலையில் BNS 118, 351, 97 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Full View


Tags:    

மேலும் செய்திகள்