நான் எழுதிய வரிகளுக்கு நியாயம் செய்திருக்கிறார்: கமலுக்கு வைரமுத்து வாழ்த்து
புதிதாக எம்.பியாக பொறுப்பேற்றுள்ள கமல்ஹாசனுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.;
சென்னை,
மாநிலங்களவையில் 6 தமிழ்நாட்டு எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. இதையடுத்து, புதிதாக 6 எம்.பிக்கள் பொறுப்பேற்றுள்ளனர்.இந்த நிலையில் எம்.பியாக இருந்து விடைபெற்றுள்ள வைகோ மற்றும் புதிதாக எம்.பியாக பொறுப்பேற்றுள்ள கமல்ஹாசன் ஆகியோருக்கு நெகிழ்ச்சிகரமாக வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து.
இதுகுறித்த வைரமுத்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
"நாடாளுமன்றம் சார்ந்து
புதிதாகப்
பொறுப்பேற்றுக்கொண்ட
நண்பர்களையும்
குறிப்பாக இருவரையும்
பாராட்டுகிறேன்
ஒருவர்
நாடாளுமன்றத்தை
நிறைவுசெய்கிறவர்;
இன்னொருவர்
நாடாளுமன்றத்தில்
நுழைவு செய்கிறவர்
மனித உரிமைகளுக்கும்
தமிழ் தமிழர்
தமிழ்நாட்டு உரிமைகளுக்கும்
சங்கு முழங்கிய
கலிங்கப்பட்டிச் சிங்கம்
வைகோ நிறைவுபெறுகிறார்
அவருக்கு
நாடே ஊராக இருந்தது;
நாடாளுமன்றமே
வீடாக இருந்தது
அவர் நெகிழ்ச்சியோடு
விடைபெறுவதில்
நெஞ்சு குழைந்தது;
வாழ்த்துகிறேன்
நுழைவு செய்கிறவர்
நண்பர்
கலைஞானி கமல்ஹாசன்
"நான் வெற்றி பெற்றவன்
இமயம் தொட்டு விட்டவன்
பகையை முட்டி விட்டவன்
தீயைச் சுட்டு விட்டவன்"
40 ஆண்டுகளுக்கு முன்னால்
நான் எழுதிய வரிகளுக்கு
இன்று நியாயம் செய்திருக்கிறார்
அவரும்
அனைத்து உறுப்பினர்களும்
தமிழில் உறுதிமொழி பூண்டது
எங்கள் புத்துணர்ச்சிக்குப்
புதுரத்தம் பாய்ச்சியது
வாழ்க!
உங்கள்
நாடாளுமன்ற நாட்கள்
நாட்டுக்கு நன்மை எழுதட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.