ராமேசுவரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த நிகழ்வை கண்டித்து, வருகிற 19-ம் தேதி ரெயில் மறியல் போராட்டம் நடத்த மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.;

Update:2025-08-10 14:09 IST

கோப்புப்படம்

ராமநாதபுரம்,

தமிழக மீனவர்கள் எல்லை கடந்து சென்று மீன் பிடித்து வருகின்றனர் என கூறி, அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. அப்படி கைது செய்யும்போது, மீனவர்களின் விசை படகுகளையும் பறிமுதல் செய்து பின்னர் அதனை அரசுடைமையாக்கி விடுகின்றனர்.

இதுபோன்ற இலங்கை அரசின் நடவடிக்கைகளால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், எல்லை கடந்து வந்து மீன் பிடித்தனர் என கூறி, ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை நேற்று கைது செய்தது.

அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ராமேசுவரம் அனைத்து மீனவர்கள் சங்க கூட்டம் ராமேசுவரம் மீன் பிடித்துறைமுகத்தில் நடைபெற்றது. அதில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த நிகழ்வை கண்டித்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் மீனவர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். மேலும், ஆகஸ்டு 13-ம் தேதி தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தம் அருகே மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும், ஆகஸ்டு 19-ம் தேதி மாலை 3 மணி அளவில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தவும் மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று ராமேசுவரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள உள்ளனர். இலங்கை கடற்படையினரை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றும் அறிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்