வங்காள மொழி விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
டெல்லி காவல்துறை ஒரு கடிதத்தில், வங்காள மொழியை "வங்கதேச தேசிய மொழி" என்று குறிப்பிட்டது சர்ச்சையாகியுள்ளது.;
சென்னை,
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள டெல்லி காவல்துறை ஒரு கடிதத்தில் வங்காள மொழியை "வங்கதேச தேசிய மொழி" என்று குறிப்பிட்டது தற்போது தேசிய அளவில் சர்ச்சையாகியுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி, இது வங்காள மொழி பேசும் மக்களை அவமதிக்கும் செயல் என்று கூறியுள்ளார். இந்த விவகாரத்தை வைத்து பாஜகவும், மம்தா பானர்ஜியும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், வங்காள மொழி விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
"மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள டெல்லி காவல்துறை வங்காள மொழியை 'வங்கதேச மொழி' என வர்ணித்துள்ளது. இது நமது தேசிய கீதம் எழுதப்பட்ட மொழிக்கே நேரடி அவமானம்.. இது தற்செயலான பிழைகள் அல்ல.. பன்முகத்தன்மையை தொடர்ந்து குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செயல். அடையாளத்தை ஆயுதமாக்கும் ஒரு ஆட்சியின் இருண்ட மனநிலையை இது அம்பலப்படுத்துகிறது. இந்தி அல்லாத மொழிகள் மீதான இந்தத் தாக்குதலில், வங்க மொழிக்கு மம்தா பானர்ஜி ஒரு கேடயமாக நிற்கிறார்."
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.