மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜைக்கு ரூ.400 கோடி செலவு
மேற்கு வங்காளத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் பந்தல் ஒன்று அமைக்கப்பட்டு, அதன் கீழ், துர்க்கை அம்மனின் சிலைகள் நிறுவப்படும்.;
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலத்தின் மிக முக்கிய பண்டிகையான துர்கா பூஜை, ஆண்டுதோறும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. எருமைத்தலை கொண்ட மகிஷா சூரனை, துர்க்கா தேவி வதம் செய்து வெற்றி கொண்ட தினமான விஜயதசமி, மேற்கு வங்காள முக்கியமான திருவிழாவாகும்.
மேற்கு வங்காளத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் பந்தல் ஒன்று அமைக்கப்பட்டு, அதன் கீழ், துர்க்கை அம்மனின் சிலைகள் நிறுவப்படும். இதற்காக மாநிலம் முழுவதும் எராளமான கமிட்டிகள் உருவாகும். அந்த கமிட்டிகளுக்கு மேற்கு வங்காள அரசு ஆண்டுதோறும் நிதி வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு துர்கா பூஜைகளுக்காக மட்டும் ஒவ்வொரு கமிட்டிக்கும் தலா ரூ. 85 ஆயிரம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த ஆண்டு ஒவ்வொரு துர்கா பூஜை கமிட்டிக்கும் தலா ரூ.1.10 லட்சம் வழங்கப்படும் என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதன் மூலம் இந்த ஆண்டு துர்கா பூஜைக்கு மேற்கு வங்காள மாநில அரசு ரூ.400 கோடி செலவிட உள்ளது. கடந்த ஆண்டு ரூ.340 செலவழிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக ரூ.60 கோடி வழங்கப்பட்டுள்ளது.