ஓட்டுநர் உரிமம் வழங்கக் கோரிய டிடிஎப் வாசன் மனு தள்ளுபடி
ஆபத்தான முறையில் பைக் ஓட்டி வந்த டிடிஎப் வாசனின் டிரைவிங் லைசன்ஸ் கடந்த 2023 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.;
சென்னை,
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் டிடிஎப் வாசன். இவர் பைக்கில் சாகசப் பயணங்கள் மேற்கொண்டு, அவற்றை யூடியூப்பில் பதிவேற்றுவதை வாடிக்கையாக கொண்டு இருந்தார். அவரது வீடியோக்களை பார்த்த இளம் வயதினர் பலரும் அவரை சமூக வலைத்தளங்களில் அதிகம் பின் தொடர்ந்தனர். டிடிஎப் வாசன் ஆபத்தான முறையில் பைக் ஓட்டி வந்ததால், அவர் மீது போக்குவரத்து விதிகளை மீறியதாகப் பல வழக்குகள் பதிவாகியுள்ளன.
தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டதால், டிடிஎப் வாசனின் வாகன ஓட்டுநர் உரிமத்தை காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரத்து செய்து உத்தரவிட்டார். அவரது ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, டிடிஎப் வாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், டிடிஎஃப் வாசனின் கோரிக்கையை ஏற்க மறுத்ததோடு, இது தொடர்பாக உரிய அதிகாரிகளை அணுக வேண்டும் எனக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.