கன்னியாகுமரி ரெயிலில் திடீர் புகை; நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி
ஏ.சி. பெட்டியில் இருந்து புகை கிளம்பியது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து, அபாயசங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.;
நகரி,
மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு 'ஜெயந்தி' என்ற பெயரில் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நேற்று முன்தினம் மும்பையில் புறப்பட்டது. ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் நந்தலூர் - அஸ்தவரம் இடையே இந்த ரெயில் வந்துகொண்டு இருந்தது.
அப்போது திடீரென ஏ.சி. பெட்டியில் இருந்து புகை கிளம்பியது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து, அபாயசங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டது. உடனே ரெயில்வே ஊழியர்கள் ஏ.சி. பெட்டியை சோதனை செய்தனர். அப்போது அந்த பெட்டியில் உள்ள சக்கரத்தில் இருந்து புகை வந்தது தெரியவந்தது. உடனே அதனை சரி செய்தனர். இதனையடுத்து ஒரு மணி நேர தாமதத்துக்கு பிறகு ரெயில் புறப்பட்டு சென்றது. இதன்காரணமாக பயணிகள் அவதியடைந்தனர்.