விளையாடிக் கொண்டிருந்தபோது கால்வாயில் தவறி விழுந்து 2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு
நாகர்கோவில் அருகே வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தை கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தது.;
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பரப்புவிளை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ் (29 வயது). இவருடைய மனைவி மஞ்சு (27 வயது). இவர்களுக்கு சுதீஷ் (3 வயது) என்ற மகனும், நமித்ரா (2 வயது) என்ற மகளும் இருந்தனர்.
நேற்று முன்தினம் மாலையில் நமித்ரா வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தாள். அந்த சமயத்தில் திடீரென நமித்ராவை காணவில்லை. இதையடுத்து அவரது தாயார் மஞ்சு தனது குழந்தையை பதற்றத்துடன் தேடி பார்த்தார். மேலும் அருகில் உள்ள கால்வாயை பார்த்த போது நமித்ரா தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தண்ணீரில் மூழ்கிய நமித்ராவை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், நமித்ரா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.