மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: நெல்லை மாணவர் முதலிடம்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.;

Update:2025-07-25 11:07 IST

சென்னை,

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் 5 ஆயிரத்து 200 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. அதில் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது.

இது தவிர தனியார் கல்லூரிகளில் 3 ஆயிரத்து 450 இடங்களும், தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கு உள்ளன. மொத்தமாக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9 ஆயிரத்து 200 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. பி.டி.எஸ். படிப்பை பொறுத்தவரையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும், தனியார் கல்லூரிகளில் ஆயிரத்து 900 இடங்களும் உள்ளன.

இந்த நிலையில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். கடந்த ஆண்டைப் போலவே நடப்பாண்டும் 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

முதற்கட்ட கலந்தாய்வு வருகிற 30-ம் தேதி தொடங்குகிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு 72,743 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில் சேர 43,315 பேர் விண்ணப்பம், 39,853 பேரின் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் 665 மதிப்பெண் பெற்ற நெல்லை மாணவர் சூர்யநாராயணன் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். சேலத்தைச் சேர்ந்த மாணவர் அபினீத் நாகராஜ் 655 மதிப்பெண் பெற்று 2-ம் இடம் பிடித்துள்ளார். 653 மதிப்பெண் பெற்ற சேலத்தைச் சேர்ந்த ஹிருதிக் விஜயராஜா 3-ம் இடம் பிடித்துள்ளார்.

திருவள்ளூர் மாணவர் ராகேஷ் 4-வது இடம், செங்கல்பட்டு மாணவர் பிரஜன் ஸ்ரீவாரி 5-வது இடம்; விருதுநகர் மாணவர் நிதின் பாபு 6-வது இடம், சென்னை மாணவர் கைலேஷ் கிரண் 7-வது இடம் பிடித்துள்ளார். சென்னை மாணவர் நிதின் கார்த்திக் 8-வது இடம், தருமபுரி மாணவர் பிரகதீஷ் சந்திரசேகர் 9-வது இடம் பிடித்துள்ளார். தரவரிசைப் பட்டியலில் தேனியைச் சேர்ந்த மாணவி பொன் ஷரினி 10வது இடம் பிடித்துள்ளார். மருத்துவ படிப்பில் சேர போலி சான்றிதழ் அளித்த 25 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Tags:    

மேலும் செய்திகள்