வங்கக் கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.;
மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது என்றும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா மாநிலங்களை நோக்கி நகர வாய்ப்புள்ளது என்றும், இதன் காரணமாக, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிக மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்திற்குப் பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பு குறைவு என்று கூறப்பட்டுள்ளது. இந்த அமைப்பு தமிழகத்தை விட்டு விலகி வட மாநிலங்களை நோக்கி நகர்வதால், தமிழகத்தில் வழக்கமான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.