குமரி லெமூர் பீச் பகுதியில் கடல் சீற்றம்: 2-வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
லெமூர் கடற்கரையில் அமர்ந்து இயற்கை அழகை ரசிப்பது சுற்றுலா பயணிகளுக்கு விருந்து படைக்கும்.;
சென்னை,
குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள கணபதிபுரம் பேரூராட்சியில் ஆயிரம்கால் பொழிமுகம் என்ற லெமூர் பீச் உள்ளது. இதனை குமரியின் குட்டி கோவளம் என்று கூறுவார்கள்.இங்கு தினமும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும். கடற்கரையில் அமர்ந்து இயற்கை அழகை ரசிப்பது சுற்றுலா பயணிகளுக்கு விருந்து படைக்கும்.
அதே சமயத்தில் ஆபத்து நிறைந்த கடற்கரையாகும். குளிப்பதற்கு ஏற்ற இடமாக இது இல்லை. இதனால் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் கடந்த சில நாட்களாக லெமூர் பீச்சில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. இந்த அலையின் சீற்றம் நேற்று பயங்கரமாக இருந்தது. ஆக்ரோஷமாக எழுந்த பேரலை கடற்கரையை தாண்டியபடி தண்ணீர் சென்றது. அங்குள்ள கடைகளையும் தண்ணீர் சூழ்ந்தது. மேலும் கடற்கரை மணல் பரப்பு முழுவதும் கடல்நீராக காட்சி அளித்தது.
இதனை தொடர்ந்து கணபதிபுரம் பேரூராட்சி சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனை அறியாமல் அங்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கும் நிலைமையை விளக்கி திருப்பி அனுப்பப்பட்டனர். இது அவர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
பொதுவாக குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் கடல் சீற்றம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். அதன்படி தற்போது இந்த வருடம் லெமூர் பீச்சில் சீற்றம் ஆக்ரோஷமாக இருந்தது. இந்த சீற்றம் மேலும் சில நாட்கள் நீடிக்கலாம் என்று தெரிகிறது. எனவே அந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்லாத வகையில் போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.