கழிப்பறையில் கூட ஊழல் செய்து கொள்ளையடிக்கும் தி.மு.க. - நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்

சுமார் ரூ.1,000 கோடி செலவிடப்பட்டும் பொதுக் கழிப்பறைகளின் தரம் மிக மோசமாக உள்ளது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.;

Update:2025-07-30 15:25 IST

கோப்புப்படம் 

தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை மாநகராட்சியின் 1,260 இடங்களில் உள்ள 10,000 பொதுக் கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 620 கோடி மற்றும் ராயபுரம், திரு.வி.க ஆகிய இரண்டு மண்டலங்களில் உள்ள பொதுக் கழிப்பறைகளைத் தனியார்மயமாக்குவதற்கு ரூ. 430 கோடி என தி.மு.க. ஆட்சியில் இதுவரை சுமார் ரூ.1,000 கோடி செலவிடப்பட்டும் பொதுக் கழிப்பறைகளின் தரம் மிக மோசமாக உள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

குறிப்பாக, ஜனவரி 2022-ல் ரூ. 3.18 ஆக இருந்த ஒரு பொது கழிப்பறையின் பராமரிப்பு செலவானது செப்டம்பர் 2022-இல் ரூ. 363.9 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால், தற்போதுள்ள முக்கால்வாசி பொதுக் கழிப்பறைகள் முறையான பராமரிப்பின்றி தண்ணீர், கதவு, தாழ்ப்பாள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தரையெல்லாம் கறைபடிந்து துர்நாற்றம் வீசுகின்றன. இது தி.மு.க. அரசின் ஊழல் முகத்தை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

ஏற்கனவே, கடந்த 2023-ல் மகளிர் நலனுக்காக ரூ. 4.5 கோடி நிதி செலவில் அறிமுகப்படுத்தப்பட்ட "she toilets" என்ற நடமாடும் மகளிர் கழிப்பறைகள் ஒரு வருடத்திற்குள் காணாமல் போய் விட்ட நிலையில், மீதமிருக்கும் கழிப்பறைகளும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் கிடப்பது மிகப்பெரும் சுகாதார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் என்பது ஆளும் அரசுக்கு தெரியாதா? இப்படி அலங்கோலமாகக் காட்சியளிக்கும் கழிப்பறைகளைப் பராமரிக்க ஆயிரம் கோடி செலவானது என அரசு கணக்கு காட்டுவது யார் காதில் பூ சுற்றுவதற்காக? இவர்கள் கொள்ளையடிக்கும் மக்கள் பணம் யாருக்கு செல்கிறது. எங்கே செல்கிறது?

ஊழல் முறைகேடுகளுக்குப் பெயர் போன தி.மு.க., தனது ஆட்சியின் இறுதிக் காலத்தில் கழிப்பறையிலும் கொள்ளையடித்து கஜானாவை நிரப்பிக் கொள்ள துணிந்துள்ளது அருவருக்கத்தக்கது. இந்த ஆட்சியை அரியணையில் இருந்து அகற்றினால் மட்டுமே தமிழகம் புத்துணர்வு பெறும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்