தீராத மலச்சிக்கலா..? தீர்வு தரும் சித்த மருத்துவம்


மலச்சிக்கலுக்கு தீர்வு தரும் சித்த மருத்துவம்
x

நிலாவாரை சூரணம் ஒரு கிராம் வீதம் இரவு ஒரு டம்ளர் வெந்நீரில் தூங்குவதற்கு முன்பு சாப்பிட்டால் மலச்சிக்கலுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

உடல் சூடு, தண்ணீர் குறைவாக குடிப்பது, மாவுச்சத்துள்ள உணவுகளை அதிகமாக சாப்பிடுவது, எண்ணெய் பலகாரங்களை அதிகமாக உண்பது, எப்போதும் இருக்கை நிலையில் உட்கார்ந்து இருப்பது, நார்ச்சத்து உள்ள உணவுகளை தவிர்ப்பது போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.

மருத்துவம்:

1. திரிபலா சூரணம் ஒரு கிராம், நாகப்பற்பம் 100 மி.கி, நத்தை பற்பம் 100 மி.கி, இவைகளை வெந்நீரில் மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

2. கருணைக்கிழங்கு லேகியம், தேற்றான் கொட்டை லேகியம் இவைகளை வகைக்கு ஒரு கிராம் வீதம் காலை இரவு இரு வேளை உண்ண வேண்டும்.

3. நிலாவாரை சூரணம் ஒரு கிராம் வீதம் இரவு ஒரு டம்ளர் வெந்நீரில் தூங்குவதற்கு முன்பு சாப்பிட வேண்டும்.

4. மூலக்குடார தைலம் -5 மிலி இரவு ஒரு வேளை சாப்பிட வேண்டும்.

5. துத்திக் கீரையுடன் சிறு வெங்காயம் சேர்த்து சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டு மசிய வைத்து இரவு உண்ணலாம்.

6. திரிபலா சூரணம் - 1 கிராம் வீதம் இரவு தூங்கும் முன் வெந்நீரில் சாப்பிட வேண்டும்.

7. கடுக்காய் பொடி -1 கிராம் வீதம் இரவு தூங்கும் முன் வெந்நீரில் சாப்பிட வேண்டும்.

8. சிவதை சூரணம் -1 கிராம் வீதம் இரவு தூங்குவதற்கு முன் வெந்நீரில் சாப்பிட வேண்டும்.

9. முள்ளங்கி காய், சவ்சவ், வாழைத்தண்டு, வாழைப்பூ, சுரைக்காய், பீர்க்கங்காய், அவரை, பீன்ஸ், கோவைக்காய், அறுகீரை, தண்டுக்கீரை, பசலைக்கீரை, வெந்தயக்கீரை போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்கறி, கீரைகளை உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

10. தண்ணீர் தினமும் குறைந்தது 2-3 லிட்டர் குடிக்க வேண்டும்.

11. வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் செய்ய வேண்டும்.

12. கிழங்கு வகைகள் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். காரமான உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

13. இளநீர், தர்பூசணி சாறு, முலாம் பழச்சாறு, மோர் இவைகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்து நிறைந்த ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யாப் பழம் மற்றும் வாழைப்பழம் உண்ண வேண்டும்.

14. காலையில் நடைப் பயிற்சி, ஆசனவாய் தசைகளை உறுதிபடுத்தும் பயிற்சிகள் செய்ய வேண்டும். முறை தவறாமல், சரியான முறையில் உணவு உண்ண வேண்டும். வயிற்றில் வாயு உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

15. சீரகம், கொத்தமல்லி, ஓமம் இவைகளை சிறிதளவு எடுத்துக் கொதிக்க வைத்த தண்ணீரை காலை, இரவு குடித்து வர வேண்டும்.


Next Story