ஒரு வருடத்தில் 6-வது முறை: மராத்தா இட ஒதுக்கீட்டிற்காக மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கிய ஜரங்கே


மராத்தா இட ஒதுக்கீட்டிற்காக மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கிய ஜரங்கே
x

மராட்டிய அரசு மராத்தா சமூகத்திற்கு வேண்டுமென்றே இடஒதுக்கீடு வழங்கவில்லை என்று மனோஜ் ஜரங்கே குற்றம் சாட்டினார்.

மும்பை:

மராட்டிய மாநிலத்தில் உள்ள மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, மராத்தா சமூகத் தலைவர் மனோஜ் ஜரங்கே பாட்டீல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். அடுத்தடுத்த உண்ணாவிரத போராட்டங்களையும் நடத்தி வருகிறார்.

ஜல்னா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான அந்தர்வாலி சராதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி நடத்திய உண்ணாவிரத போராட்டத்தின்போது போலீசார் தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதன்பின் கடந்த ஜனவரி மாதம், குடியரசு தினத்தன்று மும்பையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கவிருந்த நிலையில், அவரது கோரிக்கையை ஏற்பதாக மாநில அரசு தெரிவித்தது. இதனால் ஜரங்கே உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார்.

அதன்பின்னர், மராட்டிய மாநில சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில், மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. எனினும், ஓ.பி.சி. பிரிவின் கீழ் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஜரங்கே மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்கி 17 நாட்கள் வரை போராட்டம் நடத்தினர்.

மராத்தா சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் விவசாய குன்பி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆவணம் இருந்தால், அந்த நபரின் ரத்த சொந்தங்கள் அனைவருக்கும் குன்பி சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அரசு தெரிவித்ததையடுத்து உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.

எனினும், குன்பி சாதிச் சான்றிதழ்களை ஏற்கனவே வைத்திருக்கும் நபர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அந்த சான்றிதழ் வழங்கும் பணியை அரசு தொடங்கும் வரை போராட்டம் தொடரும் என கூறி அவ்வப்போது போராடி வருகிறார்.

அவ்வகையில், ஜரங்கே தனது கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். சொந்த ஊரான அந்தர்வாலி சராதி கிராமத்தில் நேற்று நள்ளிரவில் இருந்து உண்ணாவிரதம் இருக்கிறார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் இருந்து இது அவரது 6-வது காலவரையற்ற உண்ணாவிரதம் என்பது குறிப்பிடத்தக்கது.

போராட்டம் தொடங்குவதற்கு முன்பு, செய்தியர்களை சந்தித்த ஜரங்கே, மராட்டிய அரசு மராத்தா சமூகத்திற்கு வேண்டுமென்றே இடஒதுக்கீடு வழங்கவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் மராத்தா சமூகத்தினர் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு தருகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

குன்பி மக்களை மராத்தா சமூகத்தினரின் ரத்த உறவுகள் என்று அங்கீகரிக்கும் வரைவு அறிவிப்பை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும், ஓ.பி.சி. பிரிவின் கீழ் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஜரங்கே வலியுறுத்தி வருகிறார்.


Next Story